Thursday, August 5, 2010

நித்தியானந்தாவை வீட்டுக்கு அழைத்த எஸ்.வி. சேகர்!


சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு, போலீஸில் சிக்கி, 50 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவை பெங்களூரில் உள்ள பிடுதி ஆசிரமத்தில் நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் சந்தித்துப் பேசினார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா செக்ஸ் உறவு கொள்ளும் காட்சி வெளியானது. அந்தக் காட்சிகள் உண்மை என்றும் நிரூபணமாகின.

இதைத் தொடர்ந்து போலீஸுக்குப் பயந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது உபதேசத்தையும் ஆரம்பித்துவிட்டார். அவரை நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பெண்கள் இப்போது பார்த்து வருகின்றனர்.

இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். மேலும் தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு நித்தியானந்தா ஹீலிங் தெரபி சிகிச்சை அளித்தாராம். இதில் அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கூறியதாவது:

நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன்.

எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, 'சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும்'என்றார்.

நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்..." என்றார்.

'ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?', என்று கேட்டதற்கு, "கேட்டேன். அதற்கு அவர், 'அந்த பெண்ணே மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது' என்று கூறிவிட்டார்" என்றார் எஸ்வி சேகர்.

'சரி... ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா? இதை ஆதரிக்கிறீர்களா?" என்றதற்கு, "இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.

அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?" என்றார்.

நித்தியானந்தா சென்னைக்கு வராமல் தவிர்ப்பது ஏன்? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?, என்று கேட்டபோது, "தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது.

சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.

பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது..." என்ரார் எஸ்வி சேகர்.

No comments:

Post a Comment