Saturday, August 28, 2010

தமிழின அழிவு! துணை போனார்களா ஈழ ஆதரவுத் தலைவர்கள்? -அதிர்ச்சித் தகவல்கள்!



டி.பி.எஸ். ஜெயராஜ் ஓர் இதழியலாளர். ஆங்கிலத்தில் நன்றாக எழுதும் ஆற்றல் பெற்றவர். ஈழத் தமிழர். சுமார் 20 ஆண்டுகளாய் கனடா நாட்டில் வாழ்ந்து வருபவர். மிகக் குறுகியதோர் காலக்கட்டம் தவிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரமாக விமர்சித்து வருபவர். இவர் கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்' (Daily Mirror) நாளிதழுக்காய் புலிகளின் முன்னாள் அனைத் துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கே.பி. (K.P.) என்ற குமரன் பத்மநாபனை நேர்கண்டு உரையாடி மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

அதில் 2009 இறுதிக்கட்ட போரின்போது சண்டை நிறுத்தம் கொணர இந்தியா முயன்ற தாகவும் அதனை சீர்குலைத்தது சில தமிழக அரசியற் தலைவர்கள் என அவர்தம் பெயர்களையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருப்பது உலகத்தமிழரிடையே தீவிர விவாதத்திற் குள்ளாகியிருக்கிறது. சண்டை நிறுத்த முயற்சிகளில் கே.பி. எனது பெயரையும் குறிப்பிட்டிருந்தமையால் கடந்த சில நாட்களாய் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கறையோடும் ஆதங்கத்தோடும் விசாரித்து வருகின்றனர்.

கே.பி. கூறியிருப்பதொன்றும் புதிய செய்தியல்ல. ஏற்கனவே ""மறக்க முடியுமா'' தொடரில் நான் விரிவாக எழுதிய விஷயம்தான். ஆனால் ஈழப் பிரச்சினையில் ஏற்கனவே பிரிந்தும், பிளவுண்டும், குழம்பியும், நொறுங்கியும் கிடக்கிற உணர்வாளர்களை மேலும் மனச் சோர்வடையச் செய்ய வேண்டாம் என்ற அக்கறையில் எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் ஒருமுறை மனம் நொந்து குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. ""நானும் பார்த்து விட்டேன், ஈழப்பிரச்சினையில் ஒருவர்தானும் இங்கு நேர்மையான வர்களாய் இல்லை''. -அவரது கூற்று நூறு சதம் உண்மை.


தனிநபர்கள், தலைவர்கள், இயக்கங்கள் மட்டில் நாம் உள்ளார்ந்த உணர்வுகளால் வசீகரிக்கப்பட்டு நாமே நம்மையுமறியாமல் உருவாக்கிக் கொள்ளும் புனித மாயைகளை துணி வுடன் அகற்றி அறிவின் துணைகொண்டு உண்மையைத் தேடினாலொழிய இந்த இனத்திற்கான பயணத் திசையை நாம் இன்னும் பல்லாண்டுகளுக்குக் கண்டறிய முடியாதென்பது மட்டும் கசப்பான நிஜம்.


கே.பி.யின் குற்றச்சாட்டினை நிராகரிக்கிறவர்களுக்கு இரண்டு வாதங்கள் வசதியாக வந்து நிற்கின்றன. முதலாவது வாதம் விடுதலைப் போராட்டத்தினை அழித்திட சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்கு பல்வேறு உதவிகளும் புரிந்த இந்தியா சண்டை நிறுத்தம் கொணர முயற்சி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது. இரண்டாவது வாதம் கே.பி. இன்று ஒரு துரோகி. அவர் சிங் களப் பேரினவாதத்தின் கைக்கூலியாக இன்று செயல்படுகிறார் என்பது. இரண்டு வாதங்களிலும் உண்மை உண்டு. அதே வேளை இந்த இரண்டு உண்மைகளோடு தொடர்புடைய வேறு உண்மை களும் உண்டு. அவை என்ன?

கே.பி. இன்று சிங்களப் பேரினவாதத்தோடு ஒத்துழைப்பவர் தான். அதில் ஐயமில்லை. அவருக்கு வேறு வழியும் இல்லை. மாட்டிக் கொண்டபின் ஒன்றேல் சித்திரவதைகளுக்குள்ளாகி மடிய வேண்டும், இன்றேல் ஒத்துழைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டும். பிழைத்திருக்க அவர் முடிவு செய்திருக்கிறார். ஈவிரக்கமின்றி இன அழித் தல் செய்த பாவிகளோடு வாழ்வது அவருக்கான வரலாற்றுச் சாபம்- வரலாறு அவரை நிச்சயம் விடுதலை செய்யாதுதான்.

அதேவேளை கே.பி. தமிழினம் கண்ட அபார ஆற்றல்கள் கொண்ட ஒரு மிகப்பெரிய போராளியும் கூட. வெறுங்கையோடு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கையை மட்டும் உணர்வாதாரமாய் கொண்டு வெளிநாடு பயணித்த கே.பி. தனியொரு மனிதனாய் புலிகளின் அனைத்துலக ஆயுதக் கொள்வனவு வலைப் பின்னலை கச்சிதமாகக் கட்டியெழுப்பியவர். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத் திற்காய் பலநூறு கோடிகள் புரளும் பன்னாட்டு வர்த்தகத்தை உருவாக்கியவர். கடல்வழிப் பாதையில் தமிழனும் ஆளுமை செலுத்திய ஓர் காலத்தை நாற்பதுக்கும் மேலான வர்த்தகக் கப்பல்களை ஓட்டி வரலாறு சமைத்தவர். கே.பி. என்றொரு ஆளுமை இல்லையென்றால் தனித்தமிழ் ஈழத்திற்கு வெகு அருகில் வந்த ஆனையிறவு வரையான போர்க்கள வெற்றிகள் சாத்தியப் பட்டிருக்காது. அது கே.பி.யின் பொற்காலம்.

ஆனையிறவு வெற்றிக்குப்பின் வந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் கே.பி. பதவியிறக்கம் செய்யப்பட்டார். அவர் செய்த தவறுகள் என்னவென்று எனக்குத் தெரியாது. அவரோடு உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குப் பொறுப்பாயிருந்த விடுதலைப் போராட்ட பொறுப்பாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களில் பலர் ஒவ்வொரு செங்கல்லாய் விடுதலைப் பேரியக்கத்தை புலம் பெயர் நாடுகளில் கட்டியெழுப்பியவர்கள். அவர்கள் கட்டியெழுப் பிய கோபுரத்தில் அமர்ந்து கோலோச்சப் புறப்பட்டு வந்தவர்கள் "காஸ்ட்ரோ குழுவினர்'. இவர்களின் முகமாக வெளிநாடுகளில் இன்று அறியப்படுகிறவர் நெடியவன். தமிழீழ விடுதலைப் போராட் டத்தை சுமார் இருபது ஆண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறவ னென்ற வகையில் இந்த விடுதலைப் போராட்டம் இத்துணை மோசமான அழிவினை சந்திக்க பல்வேறு காரணங்களென்றாலும் முதற்காரணம் இந்த காஸ்ட்ரோ குழுதான். முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்த காலத்தில் "வணங்கா மண்' கப்பலை வைத்து இவர்கள் அடித்த கொள்ளையின் கணக்கைக் கேட்டாலே தமிழ் வரலாறு காறி உமிழும். இன்றும் உலக அளவில் விடுதலைப் போராட்டம் சேமித்த சொத்துக்களை கட்டுப்படுத்துவது இவர்கள்தான். தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களாய் காட்டிக்கொள்கிற தலைவர்கள் பலரும் இந்த காஸ்ட்ரோ குழுவின் ஆதரவாளர்கள் என்பதும் முக்கியமானது.




தமிழீழ மக்களின் அரசியற் சிக்கலை ஓரளவு அனுசரணையுடன் அணுகி வந்த ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திடக் காரணமாக இருந்தவர்கள் இந்த "காஸ்ட்ரோ குழு' புண்ணிய வாளர்கள்தான். ராஜபக்சேக்களின் ரத்தவெறி போர் கண்டும் மேற்குலகம் பாராமுகம் காட்டியமைக்கு சகல பொறுப்பும் காஸ்ட்ரோ குழுவினரின் பொறுப்பற்ற அணுகுமுறைதான்.

இரண்டாவது இந்தியா தொடர்பான கேள்விக்கு வருவோம். ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோம். அன்றும் சரி, இன்றும் சரி -இந்திய அதிகார அமைப்பு தமிழரை ஒரு பொருட்டாக மதித்ததில்லையென்பதே உண்மை. லட்சக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக்கிய சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் தொடங்கி, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோதும், இன்று வெறிபிடித்த "தொடர் கொலைகாரன்' - நங்ழ்ண்ஹப் ஃண்ப்ப்ங்ழ் போல் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள தேசத்தை சங்கோஜம் ஏதுமின்றி "நேச நாடு' என வெளிப்படையாகவே கொண்டாடுவதுவரை... தமி ழரை ஒரு பொருட்டாக இந் திய அதிகார அமைப்பு கருத வில்லை என்பதே உண்மை. பிரதமர், அமைச்சர் பெரு மக்களுக்கெல்லாம் அப்பால் இந்த நாட்டுக்கான முக்கிய கொள்கைகளை வகுக்கிற அதிகாரக் கூட்டம் தமிழர் களை வெறுக்கிற தென்பதே உண்மை. இவர்களை எதிர் கொள்கிற பெரும் அறிவுக் கூட்டமொன்று தமிழகத்தி லிருந்து எழுகின்றவரை அது தொடரத்தான் செய்யும்.

தமிழீழத்தை என்றுமே இந்திய அதிகார அமைப்பு விரும்பவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒரு காலத்தில் அது விரும்பியது. உண்மையில் தென்புலத்தில் தனது பிராந்திய அபிலாஷைகளுக் காக இந்திய அதிகார அமைப்பு உருவாக்கிய முதல் 'நற்ழ்ஹற்ஹஞ்ண்ஸ்ரீ ஹள்ள்ங்ற்' -விடுதலைப்புலிகள் இயக்கம். பொதுவாக நம்மிடையே நிலவும் ஓர் கருத்து 1983 ஜூலை கலவரங்களுக்குப் பின்னர்தான் இந்தியா போராளிகளுக்குப் பயிற்சி தரத் தொடங்கிய தென்பது. அது உண்மையல்ல. பிரபாகரனும் உமாமகேசுவரனும் 1982-ல் பாண்டிபஜாரில் துப்பாக்கி மோதல் நடத்தினார்களென்பது பதிவு. எனில், தனக்காக, தனது நலன்களைப் பேணுவதற் கான அடியாட்களாக விடுதலைப்புலிகள் இயக்கத் தை கட்டமைக்க கலவரங்களுக்கெல்லாம் முன்னரேயே இந்திய அதிகார அமைப்பு விரும்பி யிருக்கிறது. ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூலிப்படைத் தலைவனாகக் குறுகிப்போக விரும்பவில்லை -விடுதலை வேங்கையாக வரலாறு படைக்க விழைந்தார் -எனவே இந்திய அரசமைப்பு அவரை வெறுத்தது. தான் கிழித்த எல்லைக் கோடு களைக் கடந்து கைவிட்டுப் போய்விட்ட 'Stratagic asset' -ஆகக் கருதிப் பொருமியது. அவரை அழிக் கவும் வரிந்து நின்றது. ஒருகட்டத்தில் "பிரபாகரன் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்ற கொள்கையைக்கூட இந்திய அதிகார அமைப்பு வைத்திருந்தது.

ஆக, வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிக்க விரும்பிய இந்தியா எப்படி சண்டை நிறுத்தத்திற்கு முயன்றிருக் கக்கூடும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆயினும் இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே உண்மை. ஒன்று 2009 ஜனவரி இறுதி வாரம் தொடங்கியும், இரண்டாவது ஏப்ரல் இறுதி வாரத்திலும்.

ஆனால் இவை தொடர்பான விப ரங்களை கே.பி. நேரடியாக அறிந்திருந் தது போலும் தெரியவில்லை. அவரது நேர்காணலை வெளியிட்ட டெய்லி மிர்ரர் நாளிதழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மகேந்திரன் அவர்களது பெயரைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த மகேந்திரன் ஐயோ பாவம். அவருக்கும் இதற்குமெல்லாம் சம்பந்தமே இல்லை. அதே பெயரினைக் கொண்ட பிறிதொரு காம்ரேட் தோழருக்குப் பதில் இவர் மாட்டிக்கொண்டு விட்டார். அதே வேளை சண்டை நிறுத்த முயற்சிகள் வென்றுவிடாதபடி தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது, குறிப்பாக நடேசன் அவர்கள் மீது தீரா அழுத்தம் கொணர்ந் தார்கள் என்பதும் உண்மை.

(வரும் இதழில்)




சிங்கள அரசின் கைப்பாவை யாகவும் கைக்கூலியாகவும் மாறிப்போனவருமான கே.பி. என்கிற குமரன்பத்மநாபன், ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.அந்த பேட்டியில், ""இந்திய அனு சரணையுடன் கூடிய யுத்த நிறுத்தம் வரும் சாத்தியத்தை, அரசியல் ஆதாயத்திற்காக கெடுத்தவரே வைகோதான்'' என்று கடுமையாக குற்றம்சாட்டியதோடு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன், தோழர் மகேந்திரன் உள்ளிட்டோரையும் விமர்சித்திருக்கிறார்.இவரது பேட்டி தமிழர்களிடையேயும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.


இந்த சூழலில், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரனிடம் கேட்டபோது,’’ ""இந்த பிரச்சினை பற்றி நான் எதுவும் சொல்வதற் கில்லை.கே.பி.என்பவர் மார்க்ஸிஸ்ட் எம்.எல்.ஏ.மகேந் திரனை பற்றித்தான் சொல்லியிருக்கிறார்''’’என்றார். மார்க்ஸிஸ்ட் மகேந்திரனோ,’’""நடேசன் என்பவரிடம் எந்த காலத்திலும் எனக்கோ எங்கள் கட்சிக்கோ தொடர்பு இருந்ததில்லை. அடிப்படையில் விடுதலைப்புலி களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் நாங்கள்'' என்று மறுக்கிறார். அன்றைய காலக் கட்டத்தில் ஈழப்பிரச்சினையில் அனுசரணையோடு இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நடேசனோடு தொடர்பில் இருந்திருப்பதை அறிந்த காரணத்தால் நாம் சி.மகேந்தரனிடம் மீண்டும் இது பற்றி கேட்ட போது அது குறித்துப் பேசவே மறுத்து விட்டார்.


இதனை அடுத்து,வைகோவின் கருத்தறிய அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போது தொடர்பு கிடைக்கவே இல்லை. இதனால் ம.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான நன்மாறனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினோம்.அவரும் வைகோவிடம் பேசிவிட்டு, ’கே.பி.யின் குற்றச்சாட்டுக்கு வைகோவின் பதில்’ என்று வைகோவின் கருத்தை நமக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.



வைகோ நமக்கு அளித்துள்ள அந்த பதிலில், ""பத்மநாபன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய்.போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னை விட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், புலிகள் அமைப்பினருக்கும் அவர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி எந்தகாலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது.


ஈழத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப அம்மக்களின் நலன்களுக்கு ஏற்ற முடிவுகளை பிரபாகரன் மேற்கொள்வார். அப்படிப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தை தடுத்தேன் என்று குமரன் பத்மநாபன் உளறி இருக்கிறார்.



2009 ஏப்ரல் 7-ந் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது,’தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா?’ என்று கேட்டார்.அதற்கு நான்,’ கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால் அணி மாறமாட்டேன். தேர்தலில் போட்டி யிடாமல் விலகிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன்.


அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார் நடேசன்,’’அண்ணா நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார் என்று குறிப்பிட்டார் மே 13. வாக்குப்பதிவு முடிந்திருந்தது. இரவு பத்தேகால் மணிக்கு என்னிடம் பேசிய நடேசன் ஜெயித்து விடலாமா அண்ணா? என்றார். அதற்கு நான்,’என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளுந்தரப்பு பணத்தை கொட்டிவிட்டது. சொற்ப வித்தி யாசத்தில் ஜெயிக்கலாம் என்றேன்.


பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றி கவலைப்பட்ட போது,’பயப்படாதீங்க அண்ணா!நாங்க வெல்வோம் அண்ணா!’என்றார் நடேசன்'' ’என்று தெரிவித்துள்ள வைகோ, ’""இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென்று உலகின் பல நாடுகள் வேண்டு கோள் விடுத்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தபோது... இந்திய அரசு ஒப்புக்குகூட போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லவில்லை. இதுதான் உண்மை. அப்படி யிருக்க, போர் நிறுத்தம் குறித்து இந்திய அரசினர் யோசனை சொன் னார்களாம்.அதனை நாங்கள் தடுத்தோ மாம்''’என்கிறார் வைகோ.


மேலும் ""அனைத்துலக அரங்கில் போர்க்குற்றவாளியாக ராஜபக்சே நிறுத்தப் படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள என்னை களங்கப்படுத்த ராஜபக்சேவின் கைக்கூலியாகிவிட்ட குமரன் பத்மநாபனை தற்போது பயன்படுத்தியுள்ளனர். குமரன்பத்மநாபன், கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது'' என்கிறார் வைகோ.


பழ.நெடுமாறனைப் பற்றியும் தனது பேட்டியில் சில விவரங்களை கே.பி. சொல்லியிருப்பதால், அது குறித்து நெடுமாறனை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,’’""கே.பி.யின் ஆதரவு பத்திரிகையாக நக்கீரன் மாறிவிட்டது. அதனால் நான் எந்த கருத்தையும் உங்களுக்கு சொல்வதற் கில்லை''’என்று கூறி தொடர்பைத் துண்டித்துக்கொண்டு விட்டார்.


ஈழப்பிரச்சினையில் துவக்க காலத்திலிருந்தே எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் உணர்வுபூர்வமாக தமிழினத்தின் பக்கம் நின்று இலங்கை அரசின் கோரமுகத்தை வெளிக்கொண்டுவந்ததில் நக்கீரனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதையும் அதற்கு ஏராளமான ஆதார செய்திகளை தரமுடியும் என்பதையும் லட்சோப லட்ச நக்கீரன் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

No comments:

Post a Comment