Friday, August 27, 2010

அடிச்சா... அமெரிக்க டாலர்தான்!


நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு மாட்டிக்கொள்ளும் ஆசாமிகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம் கள்ளக்குறிச்சி இளைஞனான சக்கரவர்த்தியோ... அமெரிக்க டாலர்களையே டூப்ளிக்கேட்டாக அச்சடித்துப் புழக்கத்தில் விட்டு... ’மோசடிச் சாதனை’ பண்ணி... காக்கிகள் தரப்பையே திகைக்க வைத்திருக்கிறான்.

அவனது மோசடிச் சாதனையைப் பார்க்கும் முன்... அவர் பிடிபட்ட விதத்தை முதலில் பார்ப்போம். விழுப்புரம் மாவட்ட கல்வராயன்மலை மேல்பரிகம் ’உண்டு உறைவிடப் பள்ளியில்’ தலைமை ஆசிரியையாக இருக்கிறார் 40 வயது எஸ்தர் ராணி. அதே பள்ளியில் சமையல்காரராக வேலைபார்க்கும் முனியப்பிள்ளை எஸ்தரிடம் வந்து ""மேடம்... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்... ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கொடுக்குறார். இதை மாத்தினா... 45 லட்சரூபாய் கிடைக்கும். உங்களுக்கு விருப்பம்னா சொல்லுங்க'' என்று காதைக்கடிக்க... இதைக்கேட்டு குஷியான எஸ்தர் டீச்சர் ‘""அப்படியா.. முதல்ல அட்வான்ஸா 25 ஆயிரம் ரூபா தர்றேன். அமெரிக்க டாலரை வாங்கிக்கொடுங்க. மீதிப்பணத்தை.. டாலரை மாத்தித் தந்துடறேன்'' என்று பணத்தை நீட்ட... அவருக்கு சக்கரவர்த்தியிடமிருந்து பிரெஸ்ஸாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வந்து சேர்ந்தது. டாலரைக் கண்டு கிறுகிறுத்துப்போன எஸ்தர்... பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு... டாலரை எக்சேஞ் பார்ட்டியிடம் மாற்றப்போனார். எக்சேஞ் பார்ட்டியோ "உங்களுக்கு எப்படி டாலர் கிடைச்சிது. டாலரைப் பார்த்தா டவுட்டா இருக்கே'’ என கேள்விகள் கேட்டுக்குடைய... அடப்போய்யா என திரும்பிவிட்டார்.


மிச்சப் பணத்தை சக்கரவர்த்தி கேட்க... ’""என் னால் உடனடியா டாலரை மாத்த முடியலை''’ என்றார் எஸ்தர். ""அப்ப என் டாலரைத் திருப்பிக்கொடுங்க'' என சக்கரவர்த்தி கேட்க... இருவருக்கும் பிரச்சினை ஆனது. உடனே எஸ்தர் விவகாரத்தை க்ரைம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி காதுக்குக் கொண்டு போனார். உஷாரான போலீஸ்... எஸ்தர் மூலம் சக்கரவர்த்தியை வளைத்தது. அவனிடமிருந்து நாலரைகோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரையும் கைப்பற்றினர்.

கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு கொண்டுவரப் பட்ட சக்கரவர்த்தியிடம் "போலி டாலரை தயாரிக்கும் ஐடியா எப்படி உனக்கு வந்தது?' என்றோம். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத சக்கரவர்த்தியோ ‘""எனக்கு கம்ப்யூட்டர்ல நல்ல திறமை உண்டு. அதை வச்சி சங்கராபுரம் கோவிந்தன் என்பவருக்காக போலி டாக்குமெண்டுகளை ரெடிபண்ணிக்கொடுத்தேன். அப்ப கள்ளநோட்டு வழக்கில் கைதாகி வெளி யே வந்த குளத்தூர் சிவக்குமாரை சந்தித்தேன். அவன்தான் "போலி டாக்குமெண்ட், கள்ளக்கரன்ஸி அடிச்சி சீக்கிரம் மாட்டுறதைவிட... அமெரிக்க டாலரை அடிச்சி கிடுகிடுனு சம்பாதிச்சிடலாம்'னு சொன்னான். அட... நல்ல ஐடியாவா இருக்கேன்னு களத்தில் இறங்கிட்டேன். கத்தை கத்தையா கரன்ஸி அடிப்பதை விட டாலர் அடிப்பது லாபமானது. ஏன்னா கரன்ஸியை விட 45 மடங்கு மதிப்புள்ளது டாலர். சிக்கிரமே பணக்காரனா ஆகணும்னுதான் இப்படி செஞ்சேன். ஆனா பிள்ளையார் சுழியிலேயே மாட்டிக்கிட்டேன்'' என்றான் கூலாக.

க்ரைம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியோ ‘""இவன் டாலரை எந்த அளவிற்கு புழக்கத்தில் விட்டிருக்கான்னு தெரியலை. அவனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிச்சாதான் முழு விபரமும் வெளில வரும். நம்ம ஆளுங்க பிராடுபண்றதுல கூட அமெரிக்க லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச் சிட்டாங்க பாருங்க'' என தலையில் அடித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment