Monday, August 16, 2010

துப்பாக்கி - நகை திருட்டில் தீட்சதர்கள்!



"சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் எங்களுக்கே சொந்தமானது. இதை அறநிலையத்துறை எடுத் துக்கொண்டது தவறு' என தீட்சிதர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் விசாரணை 9-ந் தேதி வர... அதை வரும் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். இந்த நிலையில் தீட்சிதர்களின் திருவிளையாடல்கள் குறித்து பரபர திருட்டு வழக்குகள் பதிவாகி... பக்தர்கள் தரப்பை பகீரில் ஆழ்த்தியிருக்கின்றன.

பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகை யாசிரியர் லட்சுமிபதி தன் மனைவி சகிதம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். கருவறை அருகே வந்தபோது தன் சட்டையைக் கழற்றிவிட்டு... இடுப்பில் செருகியிருந்த தனது பிஸ்டலைக் கவரோடு எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார்.

பின் தம்பதிகள் இருவரும் கண் களை மூடி... நெக்குருக நடராஜப் பெருமானைத் தொழுதனர். கண்களைத் திறந்தபோது... பிஸ்டல் அம்பேல். அதன் மதிப்பு 4 லட்ச ரூபாய். தீட்சிதர்கள் திருட்டு முழி முழிக்க... லட்சுமிபதியோ நேராக காவல்நிலையத்துக்குப் போய் புகார் கொடுத்துவிட்டு... ஊருக்கு சோகமாகக் கிளம்பினார். இது நடந்தது கடந்த ஜனவரியில்.





இதேபோல் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஒருவரின் உறவுக்காரப் பெண் ணான சுகந்தா... கருவறை முன்பு தன் கேஸ்பேக்கையும் செல்போ னையும் கீழே வைத்துவிட்டு... கண்களை மூடி சாமி கும்பிட்டார். கண்களைத் திறந்தபோது அதுவும் மாயமாகி இருந்தது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சுகந்தா. இது நடந்தது பிப்ரவரியில்...

இரண்டாவது விவகாரத்தில் உறவுக்கார கிரிமினல் லாயர் கொடுத்த பிரஷரால்.. காக்கிகள் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்க... கோயிலில் இருந்த நடராஜ தீட்சிதர் ஓடிவந்து ""கேஸ்பேக் விநாயகர் சன்னதியண்டே கிடந்துச்சு. செல்போன் கிடைக்கலை''’என்றபடி அசடுவழிந்தார்.

லாயர் செல்போனையும் விடவில்லை. விவகாரம் எஸ்.பி.அஸ்வின் கோட்நீஸ் கவனத்துக்குப்போக... காணாமல் போன பிஸ்டல், செல்போன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க.. எஸ்.ஐ.அம்பேத்கர் தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீமை அமைத்தார். பிறகு?

காக்கிகள் நெற்றியில் விபூதி பட்டையுடன் பக்தர்கள் போல் மாறுவேடத்தில் கோயிலுக்குள் நுழைந்தனர். அத்தனைபேரையும் கண்காணித்தனர். அப்போது ராஜகணேசன் என்ற தீட்சிதர் மீது அவர்களுக்கு சந்தேகம் உறுதியாக... ""சாமி எங்க ஆத்துக்கு வாங்கோ. ஒரு விஷேச பூஜையை முடிச்சிண்டு வந்துடலாம்''’என்றபடி அவரை ஸ்டேசனுக்குக் கொண்டு வந்தனர். காக்கிகள் விசா ரித்த விசாரிப்பில்..

""என்னை ஒண்ணும் பண்ணிடாதேள். எல்லாத்தையும் சொல்லிடறேன். அன்னைக்கு அந்த பெங்களூர் காரா வந்தப்போ... செல்போன்னு நினைச்சிதான் அந்தக் கவரை ஆட்டைய போட் டேன். அப்புறம்தான் அதில் பிஸ்டல் இருப்பது தெரிஞ்சிது. இதை வச்சிண்டு நான் என்ன பண்றது? அதான் கோயில்ல இருக்கும் கிரி, ரத்தினம், பாலசந்திரன் ஆகிய என் தோஸ்துகள்ட்ட கொடுத்துட்டேன்'' என்றதோடு மேலும் பல திடுக் தகவல் களையும் கேஸுவலாகச் சொன்னார்...

""பொதுவா பொம்பளைகள் தங்களோட மணிப்பர்சை இடுப்பிலோ... நெஞ்சுப் பக்கமோ தான் செருகிவச்சிருப்பா. அதை நோட்டம் போட்டுட்டு.. அவா கண்ணை மூடி கடவுள்ட்ட வேண்டும்போது.. சரக்குன்னு மணிப்பர்சை உருவிட்டுப் போய்டுவேன். ஆனா என்னை விட பெரியபெரிய திருடாள்லாம் கோயில்ல இருக்கா. பெண்கள் கழுத்தில் போட்டிருக்கும் தங்கச் சங்கிலியைக் கூட படக்குன்னு அவாளுக்குத் தெரியாம நேக்கா அறுத்துடுவா. அதேபோல் உண்டியலுக்குள் இருக்கும் தங்க நகைகளை எப்படி திருடுவா தெரியுமா? ஒரு சவர பிளேடில்.. குழந்தைகள் தின்னுமே பபிள்கம். அந்த பபிள்கம்மை ஒட்டி.. பிளேடை மெல்லிசான கயித்தில் கட்டி... உண்டியலுக்குள் விடுவா. அதில் தங்க நகைகள் ஒட்டிக்கும். அப்புறம் அதை அப்படியே மேலே இழுத்து எடுத்துக்குவா.. அதேபோல் கோபுரத்தில் இருக்கும் தங்கக் கூரையை... நகவெட்டியில் இருக்கும் அரத்தால் அறுத்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்துடுவா'' என்றார் ராஜ கணேசன்.

இதற்கிடையில் ராஜ கணேசனின் அப்பாக்காரரான ஆனந்த தாண்டவ தீட்சிதரோ.. "என் மகனைக் காணவில்லை' என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் பண்ணி.. டிராமா போட ... இதைக்கண்ட ஸ்பெஷல் டீம்... எழுதி வாங்கிக்கொண்டு ராஜகணேஷை வெளியே அனுப்பிவிட்டு.. அவர் முதுகில் கண் வைத்தி ருக்கிறது.

துப்பாக்கியைப் பதுக்கிவைத்திருக்கும் அந்த மூவரணியை.. 19-ந் தேதிவரை போலீஸில் சிக்காமல் தலைமைறைவாக இருக்கும்படி அவர்களது வழக்கறிஞர் எச்சரித்திருக் கிறாராம். காரணம் அன்றுதான் சிதம்பரம் கோயில் யாருக்கு சொந்தம் என சுப்ரீம் கோர்ட் டில் நடந்துவரும் வழக்கின் டிரையல் வருகிறது. இதற்கு முன் திருட்டு வழக்கில் தீட்சிதர்கள் கைதான விவகாரம் வெளியானால்.... தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்துவிடும் என்ற பயத்தால்தான் இப்படி தலைமறைவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ. அம்பேத்கரிடம் நாம் கேட்டபோது...

""நாங்கள் அந்த ராஜகணேஷை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே... அவர் தந்தை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் பண்ணிவிட்டார். அதனால் அவரை, எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியிருக்கிறோம். கோர்ட் இது குறித்து எங்களிடம் நோட்டீஸ் அனுப்பிக் கேட்கும்போது ராஜகணேஷ் அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்வோம். கோர்ட் அனுமதி பெற்று அடுத்த கட்ட கைது நடவடிக்கைகளில் இறங்குவோம். எந்தத் திருடனும் தப்ப முடியாது'' என்றார் அதிரடியாக.

கோயில் அதிகாரி சிவக்குமாரோ ""தங்கக் கூரையை சுரண்டும் விசயம் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. இனி தங்கக்கூரையை ஆய்வு செய்யப்போகிறோம்''’என்கிறார் கவலையாய்.

தீட்சிதர்கள் சங்கச் செயலாளர் வைத்திய லிங்கம்... ""அந்த ராஜகணேசன் ரொம்ப நல்ல பையன். அதோட அந்த மூணுபேர் பேரையும் எதுக்கு போலீஸ்ல சொன்னான்னும் புரியலை''’ என்றார் கூலாய்.

""கோயில் விவகாரங்களை சி.ஐ.டி.போலீஸ் தீரவிசாரிக்கவேண்டும். சிதம்பரம் கோயிலுக்குள் ளேயே பக்தர்களிடம் வழிப்பறி செய்துகொண்டி ருக்கும் தீட்சிதர்களை.. இனியும் கோயிலுக்குள் அனுமதிக்கலாமா?''’என்று ஆவேசமாய்க் கேட்கிறார்கள் தில்லை பக்தர்கள்.

No comments:

Post a Comment