Monday, August 23, 2010

அடுத்த மாதம் இன்னொரு 'அடி' விழும்! - அமெரிக்க மார்க்கெட் குறித்து அடுத்த பகீர்!


டெல்லி: அடுத்த மாதம் நிச்சயம் அமெரிக்கப் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்திக்கும் என்கிறார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.

இந்த வீழ்ச்சிக்கு 'ஹிண்டன்பர்க் பயங்கரம்' எனப் பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா. அமெரிக்க மார்க்கெட் வீழ்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்ளுமுன் ஹிண்டன்பர்க் பயங்கரம் பற்றி...

ஹிண்டன்பர்க் என்பது ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் தயாரான விமானம். 1936-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வுக்கும் ஜெர்மனிக்கும் பயணிகள் சேவையைத் துவங்கியது. முதல் ஆண்டு வெற்றிகரமாக சேவையைப் பூர்த்தி செய்த இந்த விமானம், 1937-ம் ஆண்டு நியூஜெர்ஸியின் லேக்கர்ஸ்ட் கடற்படை விமான தளத்தில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியது.

இதில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியைத் ஏற்படுத்திய விமான விபத்து இது. தரையிறங்குவதற்கு மிக சமீபத்தில் விமானம் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெடித்தது ஹிண்டன்பர்க். இதற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை.

இப்போது சாதாரணமாகத் தெரியும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இதுபோன்ற பெரும் விபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஜிம் மெய்க்கா.

அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.

பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பாதிப்பு எதுவும் இருக்காதாம். பங்குச் சந்தையில் அடுத்த சில மாதங்களில் 10 சதவிகித வீழ்ச்சி சாத்தியம் என்றாலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருக்காதாம்.

அதேநேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை இப்போதைக்கு மிகவும் செலவுமிக்கது என்றே கருதுவதாக ஜிம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

"இந்திய சந்தையில் பெரிய அளவு கரெக்ஷன் இருந்தாலும், அது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையாது. வரும் டிசம்பர் 2014 வரை, எந்த அளவு பங்குச் சந்தை வீழ்ந்தாலும் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நிலைமை தலைகீழ்" என்கிறார் ஜிம்.

No comments:

Post a Comment