Saturday, August 14, 2010

அடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்!


தமிழ் சினிமாவில் நடிகர் - நடிகையாக நடிக்க வேண்டுமானால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதலில் உறுப்பினராக வேண்டும்.

ஆனால் சமீப காலமாக நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நடிகர் சங்கம் நாளை (15-ந் தேதி) வரை கெடு விதித்தது. சங்கத்தில் உறுப்பினராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்றும் எச்சரித்தது.

தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக சேராதவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சமீபத்தில் ரிலீசான ராவணன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ரஜினியுடன் அவர் நடித்துள்ள எந்திரன் விரைவில் ரிலீஸாக உள்ளது.

எனவே ஐஸ்வர்யா ராய் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி வற்புறுத்தினார். இந்த நிலையில் கெடுவுக்கு முன்பாகவே புதுமுக நடிகர்- நடிகைகள் பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

அங்காடித் தெரு நாயகன் மகேஷ், களவாணி நாயகன் விமல் ஆகியோர் உறுப்பினராகியுள்ளார்கள். ஜெனிலியா, ஹன்சிகா, சமீரா ரெட்டி, ஓவியா போன்றோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு உறுப்பினராகிவிட்டனர்.

மேலும் பல நடிகர்- நடிகைகள் உறுப்பினராகச் சேர்ந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமையன்று பல நடிகர்கள் சங்க வளாகத்துக்கு வந்து காத்திருந்து விண்ணப்ப படிவங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். அவற்றை பூர்த்தி செய்து நாளை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை ஐஸ்வர்யா ராய் உறுப்பினராக சேரவில்லை. அவருக்காக யாரும் விண்ணப்பப் படிவம் வாங்கியாதாகவும் தெரியவில்லை. சங்கத்தில் உறுப்பினர் ஆகாதவர்கள் பெயர் பட்டியல் நாளை மறுநாள் (16-ந் தேதி) தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் இன்று கூறப்பட்டது.

No comments:

Post a Comment