Thursday, August 19, 2010

அதிர வைத்த ஆறு கொலை! அமைச்சர் அண்ணன் மகன் தொடர்பா?


சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.

கடந்த வெள்ளியன்று மாஜிஸ்திரேட் முன் நடை தளர்ந்து போய் ஆஜரான சிவகுரு, ""அய்யா நான் சேலம் தாசநாயக்கன்பட்டி சௌடாம் பிகா நகர்ல இருந்து வரேன்..'' அடுத்து அவன் பேசப் பேச...'' அங்கிருந்த சென்னை காவல் துறை உடனே சேலம் டி.ஐ.ஜி. வெங்கட்ராமனுக்கு தகவல் தர, எஸ்.பி. ஜான் நிக்கல்சன் தனது படை பரிவாரங்களுடன் அப்பகுதிக்கு புயல் வேகத் தில் புறப்பட்டார். அதிகம் ஆள் அரவமற்ற... தோட்டத்திற்கு நடுவில் உள்ள தனி வீட் டிற்குள் நுழைந்த நாம் கண்ட காட்சியால் ஒருமுறை இதயம் நின்று துடித்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர்கள் அகோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். முன்னறை யில் ரத்னம் (45) கழுத்து வெட்டுப்பட்டு கிடக்க... அவர் கையை இறுக பிடித்தபடி அவரின் 12 வயது மகள் விக்னேஸ்வரி தொண்டை அறுக்கப்பட்டு கண்கள் பிதுங்கி கிடந்தார். உள்ளே ரத்னத்தின் தாய் சந்திரா (63), அப்பா குப்புராஜ் (78), மனைவி சந்தனகுமாரி (40), மகன் கௌதமன் (22) நால்வரும் கழுத்து வெட்டப்பட்டு கொடூரமாக கிடந்தனர்.

"அண்ணன் தம்பிக்குள்ள ரொம்ப வருஷமா சொத்து தகராறு இருந்துச்சு. அதுலதான் இந்த கொலை நடந்துருக்கும்' கூடியிருந்த ஊரார் கிசுகிசுக்க... ""டேய் சிவகுரு நம்ம குடும்பத்துலயே பொறந்து நம்ம வம்சத்தையே கருவறுத்துட்டியேடா'' மாரடித்து கதறியபடியே விஜயலஷ்மி அங்கு வர அவரிடம் பேசினோம். ""எங்கப்பாவுக்கு நான்தான் மூத்தவங்க. அடுத்து ராமலிங்கம், சிவகுரு, ரத்னம். ராமலிங்கம் 15 வருஷம் முன்னாடியே விபத்துல இறந்துட்டான். இருக்குற ஆறு ஏக்கர் நிலத்துல மூணு ஏக்கர் ராமலிங் கம் குடும்பத்துக்கும் மீதிய ரத்னத்துக்கும் அப்பா எழுதி வச்சுட்டாரு. சிவகுருவுக்கு ரெண்டு கிட்னியும் போயிடுச்சு. அதனால மருத்துவ செலவு நிறைய அப்பா செஞ்சுட்டதால டவுன்ல ஒரு வீடு மட்டும் எழுதி தந்தாரு. இன்னும் நெலம் வேணும்னு அப்பாகிட்டயும் தம்பிகிட்டயும் பொழுதினிக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பான். ஆனா கடைசியா இப்படி பண்ணு வான்னு நினைக்கவே இல்லைங்க. அவனுக்கு கிட்னி போனப்ப நான்தான் ஒரு கிட்னிய குடுத்து சிவகுருவ பொழைக்க வச்சேன். கடைசியா ஒருத்தனை காப்பாத்தி ஆறுபேரை நானே கொன்னுட் டேனே. நான் தராம இருந்திருந்தா இன்னிக்கு எங்க குடும்பத்த எழந்துருக்க மாட்டோமே...'' மேற் கொண்டு அவரால் பேச இயல வில்லை.

காவல்துறையைச் சேர்ந்தவர் களோ, ""இரவு 8.12-க்கு ரத்னத்துக்கு கால் வந்துருக்கு. அதன்பின் கொலை நடந்து இருக்கணும். எங்க சர்வீஸ்ல இப்படி ஒரு படுகொலைய பார்த்தது இல்ல. முதல்ல நாலுபேரை கொன்னு ருக்காங்க. அடுத்து ஆடி பண்டி கைக்கு மாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு பைக்ல திரும்பி வந்த ரத்னத்து மேல மிளகாய் பொடி தூவி இருக்காங்க. கூட இருந்த குட்டி பாப்பா விக்னேஸ்வரியை கழுத்தை கிழிச்சிருக்காங்க. விழுந்த ரத்னத்த தலையை அந்த வாய்க்கால் திட்டு லையே இடிச்சு தர தரன்னு வீட்டுக்குள்ள இழுத்துட்டு போயி வெறி எடுத்துப் போய் கொன்னு ருக்காங்க. 30 வருஷம் முன்னாடி மலையூர் மம்பட்டியான் குடும்ப பழி தீர்க்க செய்த கொலையைவிட இது பயங்கரம்'' என்றனர் சற்று பீதி யுடனே.

அங்கிருந்த எஸ்.பி.யோ, ""ரெண்டு அல்லது நாலுபேர் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் நடுமகன் சிவகுரு சென்னை கோர்ட்ல சரணடைஞ் சிருக்காரு. சிவகுருவோட பையன் கோகுலை தேடிக்கிட்டு இருக்கோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல இயலும்'' என்றார்.


ரத்னத்தின் சின்ன மாமியார் கலாவதியோ, "அம்மா! கொழுந்தனாரு யார் யாரோ ரவுடிங்கள் கூட்டிக்கிட்டு வந்து மிரட்டுறாரு. பொட்டை புள் ளைய வீட்ல வச்சுகிட்டு பயமா இருக்கு'னு சொல்லிக்கிட்டே இருப்பாள். அவ பயந்தமாதிரியே அவளையும் குடும்பத்தையும் கொன்னுபுட்டான்களே. என் பேத்திய பாருங்க எந்நேரமும் சிரிச்சுக்கிட்டே இருப்பா. அந்த பிஞ்சை கொல்ற துக்கு அந்த படுபாவிங்களுக்கு எப்படி மனசு வந்ததோ... அவனுங்க நாசமா போவானுங்க என கதறியவர் ""போலீஸ் ரெண்டு பேருனு சொல்லிக்கிட்டு இருக்கு. வெறும் ரெண்டு பேரு மட்டும் கொலை பண்ணியிருக்க முடியும்களா... கூலிப்படை வச்சுதான் கொன்னுருப்பானுங்க. இதுக்கு பின்னாடி அமைச்சர் வீரபாண்டியார் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ் இருக்காருன்னு சந்தேகப்படுறோம்' எனும் போதே விஜயலட்சுமியும் இணைந்து ""ஆமாங்க நில விவகாரத்தை பாரப்பட்டி சுரேஷ்கிட்ட சிவகுரு கொண்டு போனான். அப்புறம் அவங்க ஆளுங்க வீட்டுக்கு வந்து அப்பாவையும் தம்பி குடும்பத்தையும் மிரட்டிட்டு போனாங்க. எங்களுக்கு ஞாயம் கிடைக்கணும்... சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேணும்'' என்றார்கள் கண்ணீரோடு.

கொலையில் கூலிப்படை ஈடுபட்டு இருக்கா? அரசியல் தொடர்பு இருக்கா? கேள்வியோடு பின்னணியை புலனாய்ந்தோம். முதல் கட்டமாக ரவுடி தொடர்பாளர்களை சந்தித்து கொலை செய்யப்பட்ட படங்களை காட்டி விசாரிச்சோம். ""நிச்சயமா இது தொழில் முறை கூலிப்படை தான் செஞ்சு இருக்கணும். ஏன்னா எல்லோரும் கழுத்துல வெட்டுப்பட்டு இருக்காங்க. எடுத்த உடனே கழுத்தையும் தொண்டையையும் அறுத்தா சாகுறவன் சத்தம் போட முடியாது. தப்பிச்சும் போக முடியாது. இத தெரிஞ்சுதான் கழுத்த பார்த்துப் போட்டு இருக்கானுங்க. அதும் முகத்துக்கு முகம் பார்க்கிற திசையில் வலது பக்க கழுத்துல போட்டுருக்காங்க. அப்போ பீச்சாங்கை பழக்கம் உள்ளவன்தான் போட்டு இருக்கணும். இங்கே, இனிப்பான பெயர் கொண்ட அழகாபுரம் டீம், மேட்டூர் டீம், உயரமான பெயர்கொண்ட அன்னதானப்பட்டி டீம், கிங் பெயர் கொண்ட உடையாபட்டி டீம்னு முக்கியமான 4 கொலைக் கூலி டீம்கள் இருக்கு. இதோடு திருச்சியிலிருந்து வந்த டீம் இந்தக் கொலைகளை செய் திருக்கலாம் என்றும் எங்களுக்குத் தகவல் வந்துள்ளது'' என்றனர் ரவுடிகளோடு தொடர் புடையவர்கள்.

தாசநாயக்கன்பட்டி வட்டாரத்திலோ ""ரத் னத்தின் அப்பா குப்புராஜ் அய்யா ரிட்டயர்டு இன்ஸ்பெக்டர், எதற்கும் பயப்படாதவரு. அதனால தான் துணிஞ்சு "அரசியல் பிரமுகர்' மேல புகார் குடுத்தாரு. சிவகுருகிட்ட அவன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டு டவுனுக்கு போய்டுச்சு. குப்புராஜ்தான் பரிதாபப்பட்டு பாசத்தோட மகன் சிவகுருவ பக்கத்து வீட்லயே தங்க வச்சாரு. ஆனா லும் ஒரு மாசம் முன்னாடி சிவகுரு "அரசியல் பிரமுகரை' கூட்டி வந்து சொத்து குடுன்னு மிரட்டினாரு. ரத்னத்தையும் மிரட்டினாங்க. மல்லூர் ஸ்டேஷன்ல புகார் தந்தாங்க. கடந்த ஒரு வாரத்துல கூட அங்க பஞ்சாயத்து நடந்தது. இந்தப் பகுதி யில் நாலு வழிச்சாலை இருக்கிறதால நிலத்துக்கு நல்ல விலை இருக்கு. ஒரு ஏக்கர் மூணு கோடி வரை போகும். மூணு ஏக்கரும் சுமார் பத்து கோடிக்கு விலை போறதுனாலதான் சிவகுரு அரசியல் பிரமுகர்கிட்ட பவர் குடுத்தாரு. அவரும் போன வாரத்துல கூட ஆளுங்களோட மிரட்டிட்டு போனாரு. அதே போல டவுன்ல குப்புராஜ் குடுத்த வீட்டை சமீபமாதான் ரூ.6,60,000-க்கு சிவகுரு வித்தாரு. அதுலதான் கூலிப்படைக்கு பணம் குடுத்து இருக்க முடியும்'' என்றனர் முகத்தை மறைத்தபடி.


நாம் இந்த பின்னணிகளையும், புகார்களையும் தொகுத்து மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வீரபாண்டி யார் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷிடம் பேசினோம்.

""சிவகுரு எங்க கட்சிக்காரரு. என் ஒன்றியத்துக் காரரு. அந்த அடிப்படையில் அவங்க குடும்ப விவகாரம் எனக்கு தெரிய வந்தது. ரத்னமும் நல்ல குணமுள்ளவர் தான். அண்ணன் தம்பிக்குள்ள சண்டை போட்டுக்க வேணாம்னுதான் நான் சொல்லி இருக்கேன். சேலத்துல எது நடந்தாலும் நான்தான் காரணமா? எனக்கும் இவ் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரை தேவை இல்லாமல் சம்பந்தப்படுத்துபவர்களை சட்டரீதியாக சந்திப்பேன்'' என்றார் டென்ஷனாக.

சிவகுரு தி.மு.க.வில் தாசநாயக்கன்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்ததால் உ.பி.க்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூலிப்படைகள் ஈடுபட்டுள்ளனரா என அறிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தேடுதல் பணியில் தமிழகம் முழுக்க சென்றுள்ளனர். யாருமே சொத்தில் பிரச்சினை செய்துவிடக் கூடாது என சொந்த குடும்பத்தையே அழித்த... இந்த ஆறு கொலை ஏற்படுத்திய அதிர்வு நீங்க வெகுநாட்கள் ஆகும்.
மண்ணாசை ஒழிந்தால் மட்டுமே இனி மனிதம் வளரும்போல.

No comments:

Post a Comment