Friday, August 27, 2010

செக்-போஸ்ட் லட்சுமி! -தாம்பரம் கதை!

சென்னை நகரின் நுழைவாயிலான தாம்பரத்தில் 48 வயதான ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் நுழைந்து வெட்டிக் கொன்றார்கள். அவரது இறப்பை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் தாம்பரம் பகுதி மக்களும் அரசியல்வாதிகளும். ஏன் இப்படி ஒரு மகிழ்ச்சி என தாம்பரம்வாசிகளைக் கேட்டோம்.

இறந்து போனவரின் பெயர் வரலட்சுமி. இருபது வருடங்களுக்கு முன்பு சென்னை நகருக்குள் வரும் வாகனங்களை சோதனை போட செக்போஸ்ட் ஒன்று தாம்பரத்தில் இருந்தது. சோதனைக்காக லாரியுடன் காத்திருக்கும் டிரைவர்களிடம் இன்ப சுகத்தைக் காட்டி அவர்களது பணத்தைப் பறிப்பதில் திறமையானவளாக செயல்பட்டதால் அவள் பெயர் "செக்-போஸ்ட் லட்சுமி' என்றே பிரபலமானது.

இந்தத் தொழிலால் சேர்ந்த பணம் ஃபைனான்ஸ் அதிபர் என்ற பெயரை கொடுத்தது. அது அவருக்கு அரசியல்வாதிகளின் நட்பைக் கொடுத்தது. அ.தி.மு.க., தி.மு.க. என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கேற்ப மாறிய அவர் விபச்சாரம், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் என சகல துறைகளிலும் வளர்ந்த இவர், கடைசியாக காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் தலைவியாக உருவெடுத்தார்.

வாய் நிறைய வெத்தலைப் பாக்கு, கழுத்து நிறைய நகைகள், "அவர் என் பாக்கெட்டில், இவர் என் ஜாக்கெட்டில், போலீஸ் என் இடுப்பில்' என தைரியமாக பேசும் வாய்ச்சவடாலுக்கு ஏற்றவாறு, நகர வி.ஐ.பி.க்களுக்கு பெண் சப்ளை செய்வதில் சாகும்வரை சளைக் காமல் தொண்டாற்றினார்.

இதற்காக இன்றளவிலும் இந்தப் பகுதியில் பிரபலமாக விளங்கும் ஆதரவற்ற பெண்கள் விடுதியையே பயன்படுத்தினார். வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவரும் இளம்பெண் களை தாம்பரத்தில் மடக்கி ஆதரவற்ற விடுதி மூலமாக வி.ஐ.பி.க்களுக்கு விருந்தாக்குகிறார் என சுசிலா என்கிற பெண் அப்போதைய தாம்பரம் காவல்நிலைய ஆய்வாளரும், தற்போதைய உதவி கமிஷனருமான குப்புசாமியிடம் 2004-ம் ஆண்டே புகார் கொடுத்தார்.

"சப்ளை அண்ட் சர்வீஸ், கந்து வட்டி, நில மோசடி என யார் லட்சுமி மேல் என்ன புகார் கொடுத்தாலும் லட்சுமி மீது பெயருக்கு ஒரு சிறிய வழக்கு ஒன்றை மிகவும் தாமதமாக பதிவு செய்து காவல் துறை தனது விசுவாசத்தை காட்டிக்கொள்ளும்' என்கிறார்கள். கடந்த இருபது வருடங்களாக தாம்பரத்தை கதிகலங்க வைத்த லட்சுமியின் முடிவு அவரது அக்காள் மகன்களாலேயே ஏற்பட்டது என சொல்கிறது காவல்துறை வட்டாரம்.

"குடிசையில் வாழ்ந்த லட்சுமிக்கு தனது மாடி வீட்டில் இடம் கொடுத்தார் அவளது அக்காள் கலைவாணி. காலப்போக் கில் கலைவாணியை வீட்டை விட்டே துரத்தியடித்ததோடு அதை தட்டிக்கேட்ட பகுதி ம.தி.மு.க. பிரமுகரான வேலு பிரபாகரனை கொலை செய்ய ரவுடி களை ஏற்பாடு செய்தார். வேலுபிரபாகரன் லட்சுமியின் அக்கா மகன்களோடு கூட்டணி அமைத்து அவரது வீட்டிலேயே லட்சுமியின் கதையை முடித்துவிட்டார்' என்கின்றனர் போலீசார்.

""எந்த ஒரு பெரிய மனிதனின் வாழ்வின் ஆரம்பத்தை ஆராய்ந்தால் அது தவறானதாகவே இருக்கும். ஆனால் லட்சுமி இப்போது திருந்திவிட்டார். திருந்திய பிறகு கொன்றுவிட்டார்கள்'' என வருத்தப்படுகிறார் தாம்பரம் நகர சேர்மன் மணி.

"லட்சுமி தவறான வாழ்க்கை வாழ்ந்தவர்' என ஒத்துக்கொள்கிறார் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா.

ஒரு லட்சுமி மறைந்தாலும் அவ ளைப் போன்ற பல லட்சுமிகள் உலா வருகிறார்கள் என பயத்துடன் முணு முணுக்கிறார்கள் தாம்பரம் மக்கள்.

No comments:

Post a Comment