Saturday, August 14, 2010

சீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்!


ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான 'சைனாடெய்லி' பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினி நடித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான எந்திரன் மற்றும் பஸ் கண்டக்டராக இருந்து சர்வதேச புகழ் பெற்ற நடிகராக உள்ள அவரது சிறப்புகள் குறித்து எழுதியுள்ளது.

"ஒரு சாதார பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்திய ரசிகர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி" என அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது சைனாடெய்லி.

மேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ரூ 165 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன் திரைப்படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம். தெலுங்கில் இந்தப் படத்தின் விற்பனை புதிய சாதனையைப் படைத்துள்ளது. தெலுங்கிலேயே தயாரிக்கப்பட்ட படம் கூட இந்த விலைக்கு விற்பனையானதில்லை.

இன்கா நாகரீகத்தின் சின்னங்கள் அமைந்துள்ள மாச்சு பிக்குவில் படமாக்கப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் என்ற பெருமையும் எந்திரனுக்கே உண்டு.

இந்தப் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெயிலர்களைப் பார்க்கும் போதே தெரிறது, இந்தியாவின் மிக ஸ்டைலான, ஆடம்பரமான படம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார் பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ்.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், ரோபோவின் விற்பனை மற்றும் புகழுக்கு முதன்மையான காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

எழுபதுகளில் ஆரம்பித்த அவரது அபார நடிப்பு மற்றும் ஸ்டைல்கள் இன்னமும் இந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்துகின்றன.

150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினிகாந்த் , ஒரு பாயும் புலியைப் போல திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பெரிய பெரிய கட் அவுட்டுகள், பேனர்கள் என தங்கள் உற்சாகத்தை அவர்கள் பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறார்கள்.

"இந்தியா மட்டுமல்ல, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்... இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. அவர் மிகச் சிறந்த நடிகர்... மக்கள் இதயங்களை வென்ற மாபெரும் ஹீரோ" என்கிறார் தரண் ஆதர்ஷ்.

"ஸ்வைன் ப்ளூ, அதிகரிக்கும் தயாரிப்புச் செலவு, மோசமான ஸ்கிரிப்டுகள் என தெலுங்குப் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ரோபோ வெளியாகிறது. இந்தப் படத்துக்குள்ள உள்ள எதிர்ப்பார்ப்பும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் தெலுங்குப் பட உலகுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது", என அந்தப் பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment