Monday, August 16, 2010

சேவல் சூதாட்டத்தில் சிக்கிக் கொண்ட ஆளுங்கட்சி பிரமுகர்!

கோவை அன்னூரை யடுத்த பொங்கலூரில் உள்ள கந்தசாமி நாயக்கர் தோட்டத்தில் சேவல் சண்டை யில் லட்சக்கணக்கில் வைத்து சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின்படி அன்னூர் இன்ஸ்பெக்டர் ஜெயச் சந்திரன், எஸ்.ஐ.வெங்கடாச்சலம் தலைமையிலான டீம் தோட்டத்திற்குள் நுழைந்தது. பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் சேவல் களைத் தூக்கிக்கொண்டு எஸ்கேப்பாகிவிட்டாலும்...

28 பேரை கைது செய்த போலீஸ் அவர்களில் சிலரிடமிருந்து 2 லட்சத்து 37 ஆயிரத்து 950 ரூபாயை பறிமுதல் செய்ததோடு 24 கார்கள், 25 டூவீலர்களையும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றியிருக்கிறது அன்னூர் போலீஸ்.

தப்பித்துப் போனவர்களில் முக்கிய தி.மு.க. பிரமுகர் ஒருவர் சேவல் சண்டை நடக்குமிடத்தில் இருந்த தாகவும், அவரின் காரும் போலீஸால் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வர... நாம் நம் அன்னூர் போலீஸ் சோர்ஸ்களிடம் பேசினோம். ""இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை சூதாட்டத்தை நடத்தி லட்சக்கணக்கில் பணம் பார்ப்பது தி.மு.க.வின் கோவை மாநகர து.செய லாளரும், மாவட்ட ஊராட்சிகளின் து.தலைவரும், அவினாசி தொகுதியின் மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. இளங்கோ மகனுமான ஆனந்தன்தான். இவருக்கு தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய து.செ. சாமி பையன், உருமாண் டாம்பாளையம் பாலு போன்றவர்கள் துணையாக நிற்பார்கள்.

ஆனந்தனுக்கு லோக்கல் அமைச்சரின் ஆதரவுக்கரம் எப்போதும் நீளும். அதனால் அவரை நாங்கள் நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

இம்முறை சேவல் சண்டை நடக்கும் இடத்திற்கு நாங்கள் ரெய்டு போன போது ஆனந்தன் வசமாக மாட்டிக் கொண்டார். ஆனந்தன் ஒரு காரில் ஏற முயற்சிக்கும் போது எஸ்.ஐ.வெங்கடாச் சலம் அந்த காருக்கு முன்னால் கற்களைத் தூக்கி வீசினார்.

என்ன செய்வதென்று தெரியாமல் அந்த களேபரத்தில் கட்டுப் பணத்தோடு காரை விட்டு இறங்கி ஓடி விட்டார் ஆனந்தன். அந்தக் கார் ஃபோர்டு பீஸ்டா டி.என்.37 ஏ.எக்ஸ்.9999. ஆனந்தன் எங்களிடம் பிடிபடாமல் போனதால் பிடிபட்ட கார் அவருடையதுதானா? என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள் சோர்வாய்.

இதுகுறித்து தி.மு.க. மாநகர துணைச் செயலாளரான ஆனந்தனிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்... ""நான் அந்தப் பொங்கலூர் பகுதிப் பக்கமே போனதில்லை. இதுமாதிரி சேவல் சண்டைகள் எல்லாம் காட்டம்பட்டி ஆனந்தன் என்பவர்தான் நடத்திக் கொண்டிருப்பார். அவர்தான் அன்று அங்கே இருந்திருக்கிறார்.

ஃபோர்டு பீஸ்டா டி.என்.37 ஏ.எக்ஸ்.9999 என்ற கார் என்னுடையதேயில்லை. நான் எப்பவும் என்னுடைய இன்னோவா காரைத்தான் உபயோகப்படுத்துவேன். யாரோ இந்தக் கார் என்னுடையது என்று தவறாக செய்தி பரப்புகிறார்கள்'' என்றார் கோபமாய்.

ஆனால் உண்மையிலேயே அந்த கார் யாருடையது என்று தெரிந்து கொள்ள ஆர்.டி.ஓ. ஆபீஸில் உள்ள நம் சோர்ஸ்களிடம் ஃபோர்டு பீஸ்டா கார் நம்பரைக் கொடுத்துக் கேட்டோம்... நம் சோர்ஸ்களோ... "எழுதிக் கொள்ளுங்கள்... இ.ஆனந் தன், த/பெ.இளங்கோ, 550, ஒயிட் பில்டிங், ஆர்.எஸ்.புரம், கோவை-641 001' என்ற முகவரி தந்து ஆனந்தனின் பொய்க் கூற்றை சரி செய்து கொடுத்தார்கள்.

No comments:

Post a Comment