Thursday, August 19, 2010

திக்... திக்... சூப்பர் பக்!



""என்னது... எவ்ளோ கிருமிக்கொல்லி மருந்து கொடுத்தாலும் நோய் குணமாக மாட்டேங்குதா? சரி... வேற வழியில்ல... எவ்ளோ பெரிய பவர்ஃபுல் கிருமியா இருந்தாலும் அடிச்சுக் கொன்றழிக்கிற கிருமிக்கொல்லியை உடம்புல செலுத்துங்க. அப்போதான் நோயாளியோட உசுரை காப்பாத்த முடியும்.''

அடுத்த நிமிடமே அந்த ஆன்டிபயாடிக் கிருமிக்கொல்லி மருந்து கொடுக்கப்படுகிறது நோயாளிக்கு. ஃபைனல் அஸ்திரமான அந்த கிருமிக்கொல்லிக்கும் அந்த நோய்க்கிருமிக்கும் நடந்த கடுமையான யுத்தத் தில்... புறமுதுகிட்டு ஓடிவந்தது கிருமிக்கொல்லி. அதிர்ந்துபோனது மருத்துவ உலகம்.

இந்த பாக்டீரியா நோய்க்கிருமிதான் "சூப்பர் பக்' என்று திக்... திக்... திகிலை உண்டாக்கியிருக்கிறது. அது மட்டுமா? "இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா என்கிற அடிப்படையில் குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் வெளிநாட்டினருக்கே இந்த "சூப்பர் பக்' நோய் தொற்றியிருக்கிறது என்றும், இந்தியாவிலிருந்துதான் இந்த சூப்பர் பக் பாக்டீரியா கிருமி உலகம் முழுக்க பரவுகிறது' என்றும் "லான்சட்' என்கிற மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி இதழில் செய்தி வெளியாக... டென்ஷனின் உச்சிக்கே போனது இந்திய அரசு.

தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சரும் பொதுநல மருத்துவருமான ஹண்டே... ""மெடிக்கல் டூரிஸத்துல நம்பர்-1 இடமா இருக்கிறது நம்ம இந்தியாதான். இப்படி நம்ம நாட்டின் மருத்துவ சேவையைப் பார்த்து வயிறு எரிஞ்சு போன வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பா இங்கிலாந்துக்காரர்கள்... இப்படி தவறான பீதியை உண்டாக்கி... மெடிக்கல் டூரிஸத்தையே அழிக்கப் பார்க்குறாங்க.

முதல் முதலில் தமிழ்நாட்டுல அதுவும் நாமக்கல் மாவட்டத்துல இருந்த டிரைவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியிருப்பதை கண்டுபிடித்து நாம அறிவிச்சோம். அப்படீன்னா எய்ட்ஸ் கிருமி தமிழ்நாட்டுலதான் தோன்றினதுன்னு சொல்ல முடியுமா? ஆனா... உண்மையிலேயே எய்ட்ஸ் கிருமி தோன்றினது அமெரிக்காவில்தானே? அந்த அமெரிக்காவின் பெயரையே எய்ட்ஸ் நோய்க்கு சூட்ட வேண்டியதுதானே?

ஆக... எப்படி இந்த நோய்க் கிருமி பரவுகிறது? எங்கிருந்து தோன்றியது? இந்த நோயின் சாதக பாதகங்கள் என்ன? என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்'' என்கிறார் டாக்டர் ஹண்டே.

ஸ்ரீராகவேந்திரா கல்லூரியின் உயிரியல் துறை தலைவரும் பேராசிரியருமான அரவிந்த் கிருஷ்ணமூர்த்தியோ... ""வயிற்றுப்புண், இருமல், சளி, ஜுரம்னு ரொம்ப சாதாரணமா அறிகுறியே தெரியாமல் தொற்றுகிற இந்த நோய்க்கிருமி... கொஞ்சம் கொஞ்சமா நம் உடம்பிலுள்ள உறுப்புகளை செயலிழக்க வைக்க ஆரம்பிச் சிடுது. நோய்க்கிருமியை அழிக்க கிருமிக் கொல்லி மருந்து கொடுத்தும்... அழிக்க முடி யாததற்கு முக்கிய காரணமே நம்ம இந்திய மருத்துவ முறைதான்'' என்று அதிர்ச்சி கிளப்பியவர்... ""ஒரு நோய்க்கிருமியை அழிக்க எந்தளவுள்ள கிருமிக்கொல்லி மருந்தை பயன்படுத்தணும்னு வரையறை இருக்கு. "சாதாரண நோய்க்கு சாதாரண மருந்தை எழுதிக் கொடுத்தால் நம்மையும் பொதுநல மருத்துவரைப்போல் மக்கள் பார்ப்பார்கள்' என்ற எண்ணத்தில் காஸ்ட் லியான "ஹெவி டோஸ்' உள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுத்துவிடுகிறார்கள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள். அதே போல் "மருந்து சாப்பிட்டதுமே சட்டுன்னு நோய் குணமாகணும்... அப்போதான் நோயாளி நம்மக்கிட்ட திரும்ப வருவார்'னு நெனைச்சு வீரியம் அதிகமுள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கொ டுக்க ஆரம்பித்ததன் விளைவுதான்... மருந்துக்கேற்ற "பவரை' உருவாக்கிக்கொண்டு "தில்'லாக வருகிறது நோய்க்கிருமிகள்.

அதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்தை வாங்கவே முடியாது என்று சட்டமே உள் ளது. மேலும், அறுவை சிகிச்சை செய்யும் உபகரணங்களை சரியாக சுத்திகரிப்பு செய்யலைன்னாலும் இந்த "சூப்பர் பக்' கிருமி பரவலாம்'' என்று எச்சரிக்கை ஆலோசனை கொடுக்கிறார்.

சுற்றுச் சூழல் ஆர்வலரும் மக்கள் நல மருத்துவருமான வீ.புகழேந்தியோ... ""தண் ணீர், உணவு மூலம் எளிதில் பரவும் இந்த பாக்டீரியா கிருமி குறித்து இந்த மாதம் "லான்சட்' மருத்துவ இதழில் வெளியான தால் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் உருவாக்கிவிட்டது. பெரிய அளவுக்கு இந்தக் கிருமி குறித்து பயப் படத் தேவையில்லை என்றா லும்... வெளிநாட்டுக்காரன் சதி என்று சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது.

ஏனென்றால்... இந்த சூப்பர் பக் என்.டி.எம்-1 நோய் குறித்து உலகத்திலேயே முதன் முதலில் ஆய்வு செய்திருப்பது நமது நாட்டில்தான். மும்பையிலுள்ள பி.டி.ஹிந்துஜா நேஷனல் மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர்கள்தான் இந்த நோய் குறித்த ஆய்வை செய்திருக்கிறார்கள்.

அப்போதே... "ஜர்னல் ஆஃப் தி அசோஸியேஷன் ஆஃப் ஃபிஸிஷியன் இன் இண்டியா' என்ற இதழில் 2010 மார்ச் மாதமே அவர்கள் வெளியிட்டுவிட்டார் கள். அதிலேயே என்டி.என்.-1 என்பதன் விரிவாக்கம் "நியூ டெல்லி மெட்டல்லோ-1' என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் இங்கிலாந்து விஞ்ஞானிகள்தான் நியூடெல்லி என்ற பெயரைச் சூட்டி நம் நாட்டை களங்கப்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. நம்ம நாட்டுல 60 சதவீத ஆன்டிபயாடிக்குகள் (கிருமிக் கொல்லி மருந்து) தேவை யில்லாமல் கொடுக்கப்படுது. ஒரு நோய்க்கிருமி ஒருத்தரை தாக்குதுன்னா அதுக்கு முக்கிய காரணம் அவருடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குன்னு அர்த்தம். அதுக்கு முக்கிய காரணம் வறுமை. இதைப்பற்றி மருத்துவர்களோ, சுகாதாரத்துறையோ பேசுறதே இல்லை.

சூப்பர் பக் மட்டுமல்ல இதைவிட அதிபயங்கரமான நோய்க்கிருமிகள் நாளுக்கு நாள் வந்துக்கிட்டேதான் இருக்கும். இதுக்கு வீரியமுள்ள ஆன்டிபயாடிக்குகளை கண்டுபிடிப்பதிலும் அதை பலகோடி செலவு செய்து வாங்கி மக்களுக்கு உபயோகப்படுத்துவதாலும் நிரந்தர தீர்வை கண்டுவிட முடியாது. சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவு, இதைக் கொடுத்தாலே மக்கள் இதுபோன்ற நோய்க்கிருமிகளிடமிருந்து தப்பிக்க முடியும். மருந்துக்கு ஒதுக்கும் பலகோடிகளைவிட இதற்கு சில கோடிகள் ஒதுக்கினாலே போதும்'' என்கிறார் நச்சென்று.
"தற்போது இந்த நோய்க்கிருமிக்கு விலை உயர்ந்த இரண்டு ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்தால் குணப்படுத்த முடியும்' என்று "லான்சட்' விஞ்ஞான பத்திரிகையிலுள்ள தமிழ்நாட்டு விஞ்ஞானி கே.கார்த்திகேயன் குறிப்பிட்டுள் ளார். "இந்த ஆன்டிபயாடிக் மருந்துகளின் வெல்கம் ட்ரஸ்ட், வையத் என்ற இரண்டு கம்பெனிகளின் நிதி உதவியால்தான் இந்த சூப்பர் பக் நோய் குறித்த ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால்... ஆராய்ச்சியின் முடிவு அந்த ஆன்டிபயாடிக்குக்கு விளம்பரமாகவே அமைந் திருக்கலாமே?' என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

No comments:

Post a Comment