Monday, August 9, 2010

நான் உள்ளே நுழைந்தவுடன் பாதுகாப்புச் செயலாளர் எழுந்து கைகுலுக்கினார்: குமரன் பத்மநாதன் விசேட செவ்வி part 2


கே: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.


ப: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர். இலங்கை அதிகாரிகளால் நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன். அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.


ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.


பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்" என்பதுபோல் ஏதோ கூறினேன்.


கே: நீங்கள் குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள உங்களை விமர்சிப்பவர்கள், புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?


ப: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை பற்றி சொன்னேன்.


எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.


கே: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?


ப: கேக், தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளை, என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.


பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்தது, என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும் ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன். அவர் சிரித்துவிட்டு "நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் " என்றார்.


நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும் அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.


கே: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?


ப: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.


போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.


இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.


நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.


இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்;கொள்ளப்படுகின்றன.


கே: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாக, நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?


ப: அது எனக்குத் தெரியும். ஆனால், உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.


கே: அது எப்படி?


ப: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சுமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கே: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?


ப: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கே: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவு, புலிகளின் கிளைகள் நிர்வாகம், நிதி சேகரிப்பு, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும், 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக்கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

ப: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவே, நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.


ஆனால், அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.


மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.


அதேவேளை, புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.


புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார்.


எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கே: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?

ப: ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோ, ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.


கே: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?


ப: அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.


கே: அதன்பின் என்ன நடந்தது?


ப: நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.


கே: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?


ப: அது இன்னொரு கதை. ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.


பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.


பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் 'இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்' என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன்.

அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன்.


கே: பாலா அண்னை (அன்ரன் பாலசிங்கம்) ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?


ப: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம்"'நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்" எனக் கூறினார்.
பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.


கே: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட, வெளிநாட்டுக் கொள்;வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?

ப: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.
இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கே: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?


ப: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.


அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர் நண்பர் அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால், ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது.


கே: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாக, பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.


ப: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.


உண்மை என்னவென்றால், நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலில,; அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் 'இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன'; எனவும் வலியுறுத்தியிருந்தார்.


கே: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?


ப: அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் "உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?" என்று கேட்டாள்.


எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். ஆவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். ஆவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.


கே: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?


ப: அது மற்றொரு நீண்ட கதை.

(அடுத்த வாரம் தொடரும்)

No comments:

Post a Comment