Sunday, August 1, 2010

22-க்கு 12 கட்டிய தாலி!

நாடி சோதிடத்தில் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில், வைத்தீஸ்வர நாதர் கோயிலைச் சுற்றியுள்ள கீழவீதி, மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி -நான்கு வீதிகளிலும் 60-க்கும் அதிகமான சோதிடக் கடைகள் உள்ளன. இந்த 60 கடைகளிலும் சுமார் 180 சோதிடப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். சுவடி படிப்பது, ஜாதகம் கணிப்பது, ஜாதகம் எழுதுவதுதான் இந்தப் பணியாளர்கள் வேலை.

சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை. கடலூரைச் சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பம் , வாடகைக் காரில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்தது. வெங்கட் சோதிடக் கடை வாசலில் நின்றது. இறங்கினார்கள். ""வாங்க வாங்க'' -வரவேற்றார் சோதிடக் கலை வெங்கட்.

""எங்க மகளோட ஜாதகத்தைக் கணிச்சுச் சொல்லணும்'' -22 வயது மகளைச் சுட்டிக் காட்டியபடி சொன்னார் கடலூர்க்காரர்.

உட்காரச் சொன்ன வெங்கட், தன் பணியாளரை அழைத்து... ""ஏம்பா... பொன்பாலா, இந்த பொண்ணோட ஜாதகத்தை சரியா கணிச்சு... எந்தத் திசையில் மாப்பிள்ளை அமைவார்? ஏழையா? பணக்காரரா? பொண் ணுக்கு திருமண நோக்கம் நடக்கிறதா? பார்த்துச் சொல்லு'' என்று பொன்பால னிடம் கடலூர் பெண்ணின் சாதகத்தைக் கொடுத்தார்.

அந்தக் குடும்பத்தை பக்கத்து கடைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்து சாதகத்தை கணிக்கத் தொடங்கினார் பொன்பாலன். கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து விட்டுக் கடைசியில் சொன் னார். ""சொல்லப் போற தைக் கேட்டு அதிர்ச்சி யடையக் கூடாது. சரியா! உங்க பொண்ணு சாதகத்தில் சூரியனும் செவ்வாயும் ஒரே வீட்ல ஒண்ணா இருக்கிறார்கள். உங்க பொண்ணுக்கு சிறப்பா கல்யாணம் நடக்கும். ஆனால் 16-ம் நாளில் கணவன் ஏதாவது விபத்தில் இறந்து விடுவான். உங்க பெண் அமங்கலி ஆவாள். இதற்கு இப்போதே ஒரு பரிகாரம் செய்யலாம். 12- வயதுக்கும் கீழே உள்ள ஒரு பையனை உங்க பெண் கழுத்தில் 3 முடிச்சு போட வைத்து, உடனே அறுத்துவிட்டு கோயில் ஊருணியில் தலையை முழுகிவிட்டு கிளம்புங்கள். பிரச்சினையே இல்லாமல் உங்க பெண் தீர்க்க சுமங்கலியாக ஆயுள் முழுக்க வாழ்வார்'' என்று சொல்ல வேண்டியதை ஏற்ற இறக்கத்தோடு சொல்லி மயங்க வைத்துவிட்டார் பொன்பாலன்.

ஆயிரம் ரூபாயை தட்சணையாக வாங்கிக்கொண்டு, தன் கடை யில் வேலை செய்யும் 12 வயது சிறுவனை அந்த 22 வயது பெண் ணுக்கு தாலி கட்ட வைத்து தோஷமும் கழித்துவிட்டார் பொன்பாலன்.

அந்தச் சோதிடர் கடையின் அறைக்குள் நடந்த இந்த தோஷ கல்யாணம், ஒருமணி நேரம் கழித்துதான் அக்கம்பக்க சோதிடர்களுக்குத் தெரிந்தது. மேல வீதியே திரண்டு வந்து, பொன்பாலனை, அந்த அறைக்குள்ளே கட்டி வைத்து அடித்து ஊரைவிட்டே விரட்டியிருக்கிறார்கள்.

சோதிடக்கடை முதலாளி வெங்கட்டை தொடர்புகொண்டு ""உண்மைதானா?'' என்றோம். ""அதெல்லாமில்லை... நேர்ல வா பேசிக் கிடலாம்'' என்றார்.

ஒளிந்து திரிந்த பொன்பாலனை கண்டுபிடித்து விசாரித்தோம்.

""பெரிசா ஞாயம் பேசுறானுங்க... அடிக்கிறானுங்க... நான் வைத்தீஸ்வரன்கோயில் பேரை கெடுத்துப்பிட்டேனாம். சாராயம் காய்ச்சி வித்தவனும், கண்டிசன் பெயில்ல கையெழுத்துப் போடுறவனும் சோசியக்கடை வச்சு ஊரு உலகத்தை ஏமாத்திப் பிழைக்கிறான். நான் ஒரு நல்ல குடும்பத்துக்கு மன வைத்தியம் செஞ்சு அனுப்பினது பெரிய தப்பா போயிடுச்சாம். அன்றைக்கு ஒண்ணும் நடக்கல. என்னை விட்டு டுங்க... நான் பேட்டியெல்லாம் தரமுடியாது...'' -நன்றாகப் பேசிக் கொண்டிருந்த பொன்பாலன் தலை தெறிக்க ஓட்டமெடுத்தார்.

No comments:

Post a Comment