Tuesday, September 21, 2010

மீண்டும் மோதல்! தி.மு.க டென்ஷன்!




""எந்தலைவனுக்கு கிடைத்த வரவேற்பை பாத்தியா?'' முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வந்த கலைஞரை, வழி நெடுகிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்ற காட்சியைப் பார்த்து பூரித்துப் போன "வட்டம்' துரை மணி ""இதே கலைஞரை'' என இழுத்து பெருமூச்சு விட்டு இமை களை மூட... அம்முதியவரின் கண்களிலிருந்து கசிந்தது கண்ணீர்-

""நேசமணி நாடார் இறந்து நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதிக்கு 1969 ஜனவரி 8-ல் இடைத்தேர்தல் வருகிறது. காங்கிரஸ் வேட்பாளராக பெருந்தலை வர் காமராஜர். தி.மு.க. கூட்டணியின் சுதந்திரா கட்சி வேட்பாளராக டாக்டர் மத்தியாஸ். காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரச்சாரம் செய்ய வருகிறார்கள், அப்போது பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரும், விவசாயத்துறை அமைச்சரான சி.பா.ஆதித்தனாரும். விருதுநகரில் காமராஜரைத் தோற்கடித்ததால் கடுங்கோபத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், கலைஞர் தங்கியிருந்த நாகர்கோவில் பயணியர் விடுதிக்கே சென்று அவர் கார் மீது கல்லெறிந்தார்கள். சாணிக் கரைசலை ஊற்ற ஆயத்தமாக இருந்தார்கள். ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு திருச்சி சென்றார் கலைஞர். அங்கே நாகர்கோவில் இடைத்தேர்தல் குறித்து பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேள்வி கேட்க, "கட்டாந்தரையில் விதைத்திருக்கிறோம்' என ஒரே வரியில் பளிச்சென்று நிலவரத்தைச் சொன்னார்.

அன்று கட்டாந்தரையில் கலைஞர் விதைத்ததுதான், இன்று இதே குமரி மாவட்டத்தில் தி.மு.க.வுக்கென்று ஒரு எம்.பி., ஒரு அமைச்சர், 2 எம்.எல்.ஏ.க்கள், மேலும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் என மாவட்டம் பூராவும் தி.மு.க.வை செழித்து வளர்த்திருக்கிறது. இன்று இம்மாவட்டம் முப்பெரும் விழா காண்கிறது.''

""ஆனாலும்...'' கட்சி விசுவாசத்தால் துரைமணி சொல்ல தயங்க...

"தென் மண்டல அமைப்புச் செயலாளரான நானல்லவா முப்பெரும் விழாவை முன்னின்று நடத்த வேண்டும்? எனக்கெதிராக அமைச்சர் சுரேஷ் ராஜன் போன்றவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்?' என மு.க.அழகிரி ஆதங்கப்பட, விழாவுக்கு அவர் வராதது ஒரு பேச்சாகிவிட்டது என்றனர் உ.பி.க்கள். அவரது அடியொற்றி மதுரை தி.மு.க.வும் ஊருக்குள்ளேயே தன்னை முடக்கிக் கொண்டது.

"பகுத்தறிவு ஏர்பூட்டி பெரியார் உழுது, அண்ணா விதைத்து, கலைஞர் வளர்த்த திராவிட இயக்கமல்லவா?' முதல்நாள் இரவே கலைஞர் வந்துவிட, கட்சிப் பணியோடு, குமரிமாவட்ட மக்கள் பணியிலும் மு.க.ஸ்டாலின் சுறுசுறுவென இறங்க... உற்சாகப் பெருக் கோடு களை கட்டியது முப்பெரும் விழா.





மறுநாளும் சாலையின் இருபுறமும் நெடுநேரம் காத்திருந்து ஆவலுடன் கலைஞரை வரவேற்றார்கள் மக்கள். அவரும் நெகிழ்ச்சி யுடன் புன்னகைத்து, கையசைத்து பதில் மரியாதை செய்தவாறே விழா மேடைக்கு வந்தார்.

முப்பெரும் விழா திடலிலும் "அழகிரிக்கு அப்படி என்ன கோபம்?' என்பதை விவாதப் பொருளாக்கிக் கொண்டிருந்தார்கள் அவரது ஆதரவாளர்கள் ஓரிருவர். ""தென்மாவட்டத்தில் முப்பெரும் விழா எங்கே நடத்துறதுன்னு அண்ணனைக் கேட்டுல்ல முடிவு பண்ணிருக்கணும். தளபதி மூலம் சுரேஷ்ராஜன்ல காய் நகர்த்தி காரியம் சாதிச்சுட்டாரு. அழைப்பிதழிலும் விளம்பரங்களிலும் அண்ணனுக்கு முக்கியத்துவம் தரல. அத விடு, நேர்ல போயி அழைக்காததும் முறையில்லியே. எல்லாமே தளபதி கண்ணசைவுலதான் நடக்கு. அப்புறம் அண்ணனுக்கு என்ன மரியாதை? அவர் எப்படி விழாவுக்கு வருவாரு?'' என்றார்கள் அங்கலாய்ப்புடன்.

சுரேஷ்ராஜன் தரப்பிலோ, ""மதுரைக்கு நேர்ல போயி அழைக்கணும்னு எதிர்பார்க்கிறாரு. இங்கயிருந்து மதுரை போயிட்டு வர்றதுன்னா ஒருநாள் வீணாயிரும். இங்க தலைவர் வர்றாரு, தளபதி வர்றாரு, விழா வேலையவும் பொறுப்பா கவனிக்கணும். எங்கே நேரம் இருக்கு? எம்புட்டு கஷ்டப்பட்டு இந்த மண்ணுல கட்சிய வளர்த்தாரு கலைஞர். அதச் சிந்திச்சுப் பார்க்க வேணாமா?'' என்கிறார்கள்.

முப்பெரும் விழா நடந்த செப்டம்பர் 20-ந் தேதி மதியம் 1.30 மணி ஃப்ளைட்டில் மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்ப சூட்கேசுடன் ரெடியாகிவிட்டார் அழகிரி. மதுரை மாவட்டத்திலயிருந்து அமைச்சர் தமிழரசி மட்டும் விழாவுக்காக நாகர் கோவிலுக்கு சென்றிருக்க, அழகிரியுடன் இருந்த மற்ற நிர்வாகிகளில் சிலர், ""தலைவர் நேற்றிரவே குமரி மாவட்டத்துக்கு வந்துட்டாரு. நாம விழாவுக்குப் போறதுதான் சரியா இருக்கும். கிளம்பலாமாண்ணே'' என்று கேட்க, இன்னும் சிலரோ, ""நாம ஏன் அழையா விருந்தாளியா போகணும்?'' என எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சிலர், ""நாங்க விழாவுக்கு போலாமாண் ணே'' என்று கேட்க, ""அது உங்க விருப்பம்'' என்று சொன்ன அழகிரி, ""நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அழகிரியின் முடிவு, தி.மு.க தொண்டர்களிடம் டென்ஷனை உண்டாக்கியுள்ளது. ""சிறப்பா நடந்துக் கிட்டிருக்கிற விழாவில், அழகிரி-ஸ்டாலின் மோதல்ங்கிற விஷயம்தான் முக்கியத்துவம் பெறும். இதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்குது. ஆளுங்கட்சி மேலே எந்தக் குறையும் சொல்ல முடியல. நலத்திட்டங்களால் மக்கள் ஆதரவும் ஆளுந்தரப்பின் பக்கம்தான் இருக்குது. கழகத்திற்குள் ஏதாவது கலகம் நடந்தால்தான் நல்லதுன்னு நினைக்கிற எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்புக்கு நம்ம கட்சியிலே இருப் பவங்களே காரணமாகலாமா? 2000த்தில் நடந்த முப்பெரும் விழாவை யும் இப்படித்தான் அழகிரி புறக்கணிச்சாரு. அப்ப தன் மகன் என்று கூட பாராமல் கட்சியிலிருந்து நீக்கினாரு. இப்ப என்ன நிலைமைகள் ஏற்படப் போகுதோ'' என கவலையை வெளிப்படுத்தினார்கள் உ.பி.க்கள்.

அந்தக் கவலையெல்லாம் நிகழ்ச்சி தொடங்கியதும் போன இடம் தெரியவில்லை. முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி குமரி மாவட்டத்தினர் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் கலைஞர். ""பெரியார் இடத்தில், அண்ணா இடத்தில் இந்த சாதாரண கருணாநிதியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். என் உயரம் என் காலிலிருந்து தலை வரை அல்ல. உங்க உள்ளத்திலிருந்துதான் என் உயரம் அளக்கப்படும். என்னை எதிர்த்தவர்கள் நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள். முதுகில் குத்தியிருக்கிறார்கள். பக்கத்தில் தூங்கும் போது குத்திக்கொல்ல பார்த்திருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தப்பித்தவன் தான் இந்த கருணாநிதி. என் பிள்ளைகளுக்காக, என் பேரன்களுக்காக என் குடும்பத்திற்காக நான் இல்லை. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. 86 வயதில் பிள்ளையா என்று கேட்கலாம்... 90 வயதானாலும் 100 வயது வரை நான் வாழ்ந்தாலும் உங்கள் வீட்டுப் பிள்ளை தான்'' என்று சொன்னபோது, "அதையும் தாண்டி வாழ்வீங்க தலைவா' என்ற குரல் கூட்டத்திலிருந்து உரக்கக் கேட்டது.

""திராவிட இயக்கத்தின் பணி இந்த மக்களுக்கு கிடைக்கத்தான் இந்தக் கட்சி பாடுபடுகிறது. திராவிடர் என்ற உணர்வை இங்கு உள்ள எல்லோரும் பெற்றுவிட் டோம் என்ற உணர்வுதான் எனக்கு அளிக்கும் பெரிய பரிசு. என்று காலைத் தொட்டு கும்பிட்டுக் கேட்கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறோம். அயோத்தி பிரச்சினை தீர்ப்பில் என்ன நடக்குமோ என்ற கவலை உருவாகிறது. வன்முறையைத் தவிர்த்து வாழ்விலே வளம் சேர்க்க உங்களை அர்ப்பணிக்க வேண்டும்'' என்றவர், ""இதற்கு உறுதுணையாக இருப்பீர்களா'' என்று கேட்க, "இருப்போம்.. இருப்போம்..' என்ற குரல்கள் கடல் அலைபோல ஒலித்தன.








* நாகர்கோவிலில் முப்பெரும் விழாவை நடத்தி வரவேற்புரையாற்றியவர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான சுரேஷ்ராஜன். பெண்கள், குழந்தைகள் என்று கலைஞர் வரும் வழியெல்லாம் மக்கள் நின்றதும், கூட்டத்திற்கு வந்தி ருந்ததும் அவரது முயற்சிக்கான வெற்றியைக் காட்டியது.


* மேடைக்கு சக்கர நாற் காலியில் கலைஞர் வந்தபோது, பார்வையாளர் வரிசையிலிருந்த ஒரு பெண்மணி எழுந்து நின்று கும்பிட்டுக் கொண்டே இருந்தார். பின்னால் இருந்தவர்கள் மறைக்கிறது என்ற போதும், தொண்டர் படையினர் உட்காரச்சொன்னபோதும் அவர் கும் பிட்டபடியே இருந்தார். என்ன காரணம் என்று நாம் அவரிடம் விசாரித்தோம். மதுரையில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றும் கவிதாராணி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், ""கலைஞரைப் பார்க் கும்போது பரவசத்தால் சிலிர்க்கிறது. அந்த உணர்வுதான் என்னைக் கும்பிட வைக்கிறது. எந்த சோதனைக்கும் கலங்காத உள்ளத் தையும் அயராத உழைப்பையும் அவரிடம் கற்றுக்கொண்டு, ஒவ் வொரு தமிழனும் தனதாக்கிக் கொண்டால் வெற்றி நிச்சயம். கலைஞரை நான் தமிழன்னையாகப் பார்க்கிறேன்'' என்றார்.


* மாணவ-மாணவியருக்கு பரிசு, ஆட்டோ ஓட்டுநருக்குப் பரிசு ஆகியவற்றுக்குப்பின் அமைச்சர் வீரபாண்டி ஆறு முகத்ததுக்கு பெரியார் விருது. முன்னாள் எம்.பி. செ.குப்புசாமிக்கு அண்ணா விருது, மகளிரணி ராஜம் ஜானுக்கு பாவேந்தர் விருது, ஜி.எம்.ஷாவுக்கு கலைஞர் விருது ஆகியவை வழங்கப்பட்டன. பரிசு வாங்க வந்த மாணவிகளில் சிலர் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்த விரும்பி, கலைஞரிடம் தெரிவிக்க அவர்களுக்கு மேடையில் வாய்ப்பளிக்கப்பட்டது. புதிய தலைமுறையின் பேச்சாற்றல் தி.மு.க மேடை வழியாக வெளிப்பட்டது.


* முப்பெரும்விழா விருது பெற்றவர்களின் சார்பில் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், நாஞ்சிலாரின் பெயரை மறக்காம குறிப்பிட்டதுடன், 1993-ல் கட்சியிலிருந்து சிலர் பிரிந்த நேரத்தில், கொடியும் சின்னமும் யாருக்கு என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் தீர்ப்பு தரவேண்டிய நாளில், கலைஞர் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் போகாமல் இருந்தார். அவரிடம் நான் பேசியபோது, அண்ணா தந்த கட்சிக்கொடியோ உதயசூரியன் சின்னமோ நம்மைவிட்டுப் போனால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றார் . அத்தகைய கொள்கைப் பற்று உள்ள தலைவர் விரும்பிய படியே கட்சியையும் சின்னத்தையும் மீட்டார் என்று உணர்ச்சிகரமான சம்பவத்தைக் கூறினார்.


* குஷ்பு பேச்சை ஆர்வ மாகத் தொண் டர்கள் கேட்டனர். வடநாட்டில் ஒரு தலைவர் பெரிய கூட்டம் கூட்டி னார். ஆனால் அவர் முகம் கவலை யாகவே இருந்தது. அருகிலிருந்த வர்களோ, உங்களுக்கு 60 மாலைகள் போட்டார்களே அப்புறம் ஏன் கவலையாக இருக்கிறீங்கன்னு கேட்க, என்கிட்டே 90மாலைக்கு காசு வாங்கிட்டாங்க. 60தான் போட்டிருக்காங்க என்றார். அதுபோலத்தான் எதிர்க்கட்சித் தலைவி நடத்தும் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கி றார்கள். அவர் முகத்தில் சந்தோஷ மில்லை. இங்கே நம் தலைவர் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் பாருங்கள் என்றபோது, கலைஞரின் முகத்தில் புன்னகை.


* கவிஞர் கனிமொழி எம்.பியின் பேச்சு உணர்ச்சிமயமாக இருந்தது. நான் டெல்லிக்குப் போகும்போதெல் லாம் பார்க்கிறேன். லாலுபிரசாத் யாதவி லிருந்து எல்லாத் தலைவர்களும் என் னிடம், எங்க தலைவர் எப்படி இருக் கிறார் என்று கலைஞரைப் பற்றிக் கேட்பார்கள். அப்படிப் பட்ட தலைவரை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நள்ளிரவில் கைது செய்து இழுத்துச் சென்றார். சிறைச்சாலை முன்பு கட்டாந்தரையில் உட்கார வைத்தார். இப்போதும் என் கண்களை மூடினால் அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இப்படிப்பட்ட கொடுங்கோலாட்சி நடத்திய அவர்களை எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்க மாட்டார் கள்'' என்றார் ஆவேசமாக. தொண்டர்கள் அதைக் கேட்ட தும் கண்கலங்கினார்கள்.


* பேராசிரியர் பேசும் போது, திராவிட இயக்க வரலாற்றை இந்த முப்பெரும் விழா விருது பெறுபவர்களின் வரிசையைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். எப்படிப் பட்ட லட்சிய வீரர்கள் இருக்கி றார்கள் என்பது தெரியும்.அந்த வரலாறு தெரியாத சிலபேர், தி.மு.க ஆட்சியை வீழ்த்தப் போவதாகப் பேசுகிறார்களாம். எனக்கு அவர்களைத் தெரியாது. அவர்களின் முகவரியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு வரையும் அவரவர் அளவில் மதிக்கிறேன். ஆனால், கலைஞரோடும் தி.மு.க வோடும் ஒருவரையும் ஒப்பிட முடியாது என்று சொன்னவர், இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவராக இருக்கிறார் கலைஞர் என்றார்.


* துணைமுதல்வர் ஸ்டாலின் முதல் நாளே நாகர்கோவிலுக்கு வந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். தனது படங்கள் அதிகமாக இருந்ததை எடுக்கச் சொல்லிவிட்டு, பேராசிரியர் படங்களை வைக்கச் சொல்ல, விழா ஏற்பாட்டாளர் கள் உடனடியாக அதைச் செய்தனர். முப்பெரும்விழாவில் நிகழ்ச்சி நிரலை வாசிப்பது, பரிசு பெற்றவர்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பது, முதல்வருக்கு உறுதுணையாக மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுவது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என்று ஒரு தொண்டர் போல பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.


* குமரி மாவட்ட அரசியல் வர லாற்றில் 40ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட பிரம்மாண்ட கூட்டம் இதுதான் என்றனர் பத்திரிகையாளர்களும் அர சியல் பார்வையாளர்களும்

No comments:

Post a Comment