Saturday, September 18, 2010

அழகிரி பாணியில் தமிழக அமைச்சர்கள்!


கழகங்களின் மதுரை மல்லுக்கட்டு இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அக்டோபர் 18-ந் தேதி மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் என்று ஜெ அறிவித்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ரியாக்ஷன் என்ன என்றுதான் அரசியல் நோக்கர்களின் பார்வை திரும்பியிருந்தது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் கொடைக்கானலில் ஓய்வெடுத்த அழகிரி, தற்போது மதுரை மாவட்ட கிராமங்களுக்கு நேரடி விசிட் அடித்து மக்கள் குறைகளைக் கேட்டு வருகிறார்.

அவரது இந்த திடீர் விசிட் பற்றி நம்மிடம் பேசிய தென்மாவட்ட உ.பி.க்கள், ""தென் மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கு 32 தொகுதிகளில் பலமான வாக்கு வங்கி உள்ளது. அழகிரியின் மதுரை எம்.பி. தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலேயே மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மூன்றும் அ.தி.மு.க தொகுதி. மதுரை மேற்கிலும் அ.தி.மு.கவுக்கு பலமான ஓட்டு வங்கி உள்ளது. இதையெல்லாம் தனது பணிகள் மூலமா ஆளுங்கட்சிக்கு சாதகமா மாற்றி, தென்மாவட்டத்தில் உள்ள 60 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியை ஜெயிக்க வச்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை மெஜாரிட்டி பலத் தோடு ஆட்சியில் அமர வைக்கணும்ங்கிறதுதான் அண்ணனோட தேர்தல் வியூகம். அதனால்தான் கிராமங்களை குறிவைத்து களமிறங்கிட்டாரு.

செப்டம்பர் 14-ந் தேதி மதுரை எம்.பி. தொகுதிக்குட் பட்ட 12 கிராமங்களில் அதிரடி விசிட்டை ஆரம்பித்திருக்கிறார். வாரத்துக்கு 12 கிராமம்னு இனி ஒவ்வொரு வாரமும் அவர் விசிட் தொடரும். தென்மாவட்ட கிரா மங்கள் முழுவதும் அவர் மேற்கொள்ளவிருக்கும் விசிட் மூலமா, மக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்வார். தென்மாவட்ட மக்களை மது ரையில் குவிக்க நினைக்கிறார் ஜெயலலிதா. அழகிரியண்ணனோ மக்களைத் தேடிப்போய் சந்தித்து குறை தீர்க்கிறார்'' என்றார்கள்.

அழகிரியின் இந்த தேர்தல் வியூக கிராம விசிட்டுக்கு மக்களிடம் எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை அவருடன் சென்றபோது அறிய முடிந்தது. முதன்முதலில் அவர் சென்ற அச்சம்பத்து கிராமத்தில், கிளைக் கழக நிர்வாகி ஒரு மேடை போட்டு மைக் செட் கட்டியிருந் தார். மைக்கைப் பிடித்த அழகிரி, ""அம்மா.... அய்யா... நான் கலைஞர் மகன் அழகிரி வந்திருக்கேன். என்னை எம்.பியாக்கி, மந்திரி யாக்கினீங்க. அப்ப நன்றி சொல் லிட்டு சில கோரிக்கைகளை நிறைவேற்றி வச்சேன். இப்ப மறுபடியும் உங்க குறைகளைப் போக்கவும், கிராமத்து திட்டங் களை நிறைவேற்றவும் வந்திருக் கேன். உங்களுக்கு ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க. மனுவா கொடுங்க. நானே நின்று நிறை வேற்றி தருகிறேன். இப்ப நான் நல்லது செஞ்சாதான் மறுபடியும் தி.மு.கவுக்கு ஓட்டு போடுவீங்க. கலைஞர் உங்களுக்கு நிறைய நல்லது செஞ்சிருக் காரு. இன்னமும் செய்யப் போறாரு. அவருதான் அடுத்த முறையும் முதல்வரா பதவியேற்கப் போறாரு'' என்றார்.

கிராமத்து மக்கள் ஆர்வமாக மனு கொடுக்க வந்தனர். அழகிரியுடன் ஸ்பாட் டுக்கு வந்திருந்த டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., பொதுப்பணித்துறை-மாநகராட்சி- மின்வாரியம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளிடம் அவரவர் துறை சம் பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கான மனுக்களைத் தந்த அழகிரி, ""மேடையை விட்டு இறங்குவதற்குள் இதற்கான உத்தரவுகள் போடப்படணும்'' என்றார்.

விதவை பென்ஷன் கேட்டு மனு கொடுத்த அச்சம்பத்து ஆண்டாளிடம் பேசினோம்.

""18 வருசமா இந்தப் பணத்துக்காக போராடிக்கிட்டிருந்தேன். இப்ப இவர்கிட்டே மனு கொடுத்ததும், அதிகாரிகள்கிட்டே சொல்லி உடனே உத்தரவு போடவச்சிட்டாருய்யா. அவரு அழகிரி இல்லைய்யா, ஆத்துல இறங்கு வாரே அதே அழகருதான். என்னை கடைசி காலத்தில வாழவச்சிட்டுப் போறாரு'' என்றார் நெகிழ்ச்சியாக.

விராட்டிப்பத்து, புதுக்குளம் கிராமங்களைக் கடந்து துவரிமான் பகுதிக்குள் நுழைந்த அழகிரிக்கு தாரை தப்பட்டையுடன் ஆரத்தி-பூர்ணகும்ப வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதே அளவுக்கு மனுக்களின் வரிசையும் இருந்தது. முதியோர் பென்ஷன் கேட்டு 2 வருஷமா கலெக்டர் ஆபீசுக்கு நடந்து கொண்டிருந்த மருதாயி என்ற மூதாட்டி, ""நடந்து நடந்தே எனக்கு கால் ஒடைஞ்சு போச்சுப்பா. இப்ப இவர்கிட்டே மனு கொடுத்த கையோடு, அதிகாரிகள்கிட்டே சொல்லி உத்தரவு போட்டுட்டாரு. இதுவரைக்கும் எம்.ஜி.ஆர் கட்சிக்கு ஓட்டுப் போட்ட இந்த கை, இனிமே கலைஞர் கட்சிக்குத்தான் போடும்'' என்றார் சந்தோசமாக. செயற்கை கால்கள் கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளி கீழமாத்தூர் மெகருன்னிசா, தீபாவளிக்கு இலவச சேலை கேட்ட கொடிமங்கலம் சின்னம்மாள் எனப் பலரது மனுவையும் வாங்கிக்கொண்ட அழகிரி பாசிட்டிவ்வான பதில்களைச் சொன்னார்.

தாராபட்டி கிரா மத்திற்குள் நுழை வதற்கு முன்பாக ரோட்டோர டீக்கடை பக்கமாக காரை நிறுத்தி, டீ குடித்த அழகிரி அங்கிருந்த வர்களிடம் கிராம நில வரங்களை விசாரித்தார். பள்ளி மாணவர்கள் ஓடிவந்து பெஞ்ச்- மைதானம் என தங்களின் தேவையைச் சொன்னார்கள். எம்.பி. நிதியிலிருந்து ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். 200 மலைஜாதி குடும்பத்தினருக்கான சாதிச்சான்றிதழ்கள் பற்றிய கோரிக்கை வைக்கப்பட, அது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். கிராமப்புறங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் நிறைய இருப்பதை அழகிரிக்கு இந்த விசிட் உணர்த்தியது.

காலில் விழவந்த கிராமத்தினரிடம், ""இதெல்லாம் அந்தம்மா ஜெயலலிதா பழக்கம். எனக்கு பிடிக்காது'' என்ற அழகிரியிடம் இரண்டு குழந்தைகளைக் கொடுத்து பெயர் வைக்கச் சொன்னார் கிளைச் செயலாளரின் உறவினர். பெண்குழந்தைக்கு செந் தாமரை என்றும் ஆண்குழந்தைக்கு தங்கபாண்டியன் என்றும் பெயர் வைத்தவரிடம், "மதுரையில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடத்தவுள்ள நிலையில், ஜெ.வுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் தரப்பட்டு, விசாரணை நடக்கிறதே' என்றோம்.

""அந்தம்மாவே ஒரு குண்டு. அந்த குண்டு மேலேயா இன்னொரு குண்டு? இதெல்லாம் அந்தம்மாவே நடத்தும் நாடகம். மதுரைக்கு அவங்க தாராளமா வந்து கூட்டத்தை காட்டிட்டுப்போகட்டும். அதை மக்களும் நீங்களும் பார்க்கத்தானே போறீங்க. நான் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்காம மக்களை சந்திக்க கிளம்பிட்டேன்'' என்றார். கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்தால், தி.மு.கவுக் கான வாக்கு வங்கியை பலப்படுத்த முடியும் என்பது அவரது கணக்கு. இது தேர்தல் கணக்காகவே இருந்தாலும், குவிந்து கிடக்கும் மக்கள் கோரிக்கைகளை அழகிரி பாணியில் தமிழக அமைச்சர்களும் நிறை வேற்றினால் மக்களுக்கு நல்லதுதானே!

No comments:

Post a Comment