Thursday, September 9, 2010

ரம்ஜான் நோன்பு பள்ளிவாசல் முன்பு பயங்கரம்!



மற்றவர்களின் குற்றங்களைப் பார்ப்பதைவிடவும்
உங்கள் குற்றங்களை முதலில் பாருங்கள்.
உப்பை நீர் கரைப்பதுபோல்...
உங்கள் நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

திருவாரூர் குடவாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் திருவிடைச்சேரியில் நாம் ஆஜரானபோது அது... திகில் பிரதேசமாகக் காட்சியளித்தது. அங்கங்கே துப்பாக்கி ஏந்திய காக்கிகள் குவிக்கப்பட்டிருக்க... தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

ஊராட்சி மன்றத்தலைவர் குத்புதீனைத் தேடிப் பிடித்தோம். கலக்கத்துடன் பேச ஆரம்பித்தவர்... ‘""இங்க 1000 குடும்பங்கள் வசிக்குது. அதில் எங்க இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் மட்டும் 400 இருக்கு. இங்க இருக்கும் முஸ்லிம்கள்.. பொதுவா ஜமாத் முகையதீன் பள்ளிவாசல்ல தொழுறதுதான் வழக்கம். கொஞ்சநாளா தவ்ஹீத் ஜமாத்காரங்க... இங்க வந்து புரட்சிங்கிற பேர்ல... குழப்பத்தை உண்டாக்க ஆரம்பிச்சாங்க. தொப்பி போடாமத்தான் தொழணும். தர்ஹாவையும் இறந்தவங்களையும் வணங்கக்கூடாது. பாத்தியா ஓதக்கூடாது. கந்தூரி விழா கொண்டாடக் கூடாது. மந்திரிச்ச தாயத்து களைக் கட்டக்கூடாதுன்னு அவங்க ஏதேதோ சொல்ல... இதை எங்க ஜனங்கள்ல பெரும்பாலான வங்க ஏத்துக்கலை. அதனால் அவங்களை எங்க பள்ளிவாசலுக்கு வராதீங்கப்பான்னு சொல்லிட் டாங்க. அதனால் இங்க இருக்கும் அப்துல் ரஹீம் வீட்டில் அவங்க ரம்ஜான் தொழுகையை நடத்தி வந்தாங்க. அவங்களால தன்னோட நிம்மதி கெடுதுன்னு எதிர்வீட்டுக் காரரான ஜபருல்லா சொல்ல... ரெண்டுத் தரப்புக்கும் இடையில் பிரச்சினை உண்டாச்சு. அது ரமலான் நோன்புத் தொழுகைக்குப்பின் நைட்டு 7 மணிக்கு கைகலப்பா ஆய்டிச்சிங்க. இதில் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த குத்புதீன் தாக்கப்பட... அவர் திருமங்கலக்குடியில் இருக்கும் அவங்க மச்சான் ஹஜ் முகமதுக்கு போன்போட்டு... என்னை அடிச்சிட்டாங்கன்னு சொல்லியிருக் கார். இந்த நிலையில்தான்.... அந்த விபரீதம் நைட் 10 மணிக்கு ஹஜ் முகமது வடிவில் வந்தது''’என்றார் கை பிசைந்தபடி.

தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொறுப்பாளரான அப்துல் ரகுமானோ ""அந்த ரெண்டு தனிப்பட்ட குடும்பங் களுக்கு இடையில் இருந்த மோட் டிவ்தான் இதுக்குக் காரணம்''’என்று முடித்துக்கொண்டார். அப்படி என்ன தான் நடந்தது?

சம்பவத்தை நேரில் பார்த்த முகமது யூசுப் வெடவெடப்பு மாறாமல் விவரித்தார்... ’""நைட் 10 மணி இருக்கும். பரபரன்னு ஆறேழு கார்கள் எங்க பள்ளிவாசல் முன்னாடி வந்து நின்னுச்சு. அதிலிருந்து கோபமா இறங்கிய ஆளுங்க... ""யார்றா ஜமாத் தலைவர்''னு கேட்டாங்க. அப்ப.. இமாம் முகமது இஸ்மாயில் வெளில வந்து ""நான்தான் ஜமாத் தலைவர். நீங்க யாரு''ன்னு கேட்டார். அவரை அந்த கும்பல் அடிச்சித் தள்ளி யது. இதைப்பார்த்து எல்லோரும் ஏன் அவரை அடிக்கிறீங்கன்னு கேட்டப்ப... அந்த ஹஜ் முகமது திடீர்னு தன் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பிச்சிட்டார். எங்க கண்ணெதிரிலேயே இமாம் முகமது இஸ்மாயிலும் ஜபருல்லா மச்சான் ஹஜ் முகமதும் அப்படியே ரத்தவெள்ளத்தில் விழுந்து துடிதுடிச்சி இறந்துட் டாங்க. அப்ப கூட்டத்தில் குண்டு பாஞ்சதில்... பால்ராஜ், சந்தியாகு, ராமதாஸ், ஹாஜா மைதீன், யாக்கத் அலி ஆகியோரும் காயம்பட்டு விழுந்தாங்க. அவங்களை ஆஸ்பத்தி ரிக்கு அவசரமா அனுப்பி வச்சோம்''’என்கிறார் நடுக்கத்தோடு..

இமாமின் மகன் அக்பர் “""ரமலான் மாதத்தில் போய் எங்க வாப்பாவை இப்படி பண்ணிட்டாங் களே’''’என தலையில் அடித் துக்கொண்டு அழுதார். ஹஜ் முக மதுவின் மனைவி ஜைனத் கனியோ “""என் பிள்ளைகளை எப்படி காப்பாத்தப் போறே னோ?''’என தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

துப்பாக்கி குண்டுகளோடு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தியாகு “""எங்களுக்கு சொந்த ஊர் பக்கத்தில் இருக்கும் விழுதி யூர். அங்க இருக்கும் ஆரோக்கியமாதா கோயில் திருவிழாவை எங்க அப்பா பால்ராஜும் நானும் ராமதாஸும்தான் நடத்தணும். அதுக்காக வசூலுக்கு இங்க வந்தோம்ங்க. அப்ப சச்சரவா இருக்க... என்ன ஏதுன்னு பள்ளிவாசல்ல எட்டிப்பார்த்தோம். அப்பதான் எங்களையும் அந்த ஆள் இடுப்புக்குக் கீழேயே சுட்டுட்டார். வலி உயிர்போற மாதிரி இருக்கு''’என்றார் வேதனையோடு. இந்த விவகாரம் குறித்து திருவாரூர் எஸ்.பி.மூர்த்தியிடம் கேட்டபோது ""அந்த ஹஜ் முகமது ஆளுங்க 10 பேரை மடக்கிட்டோம். இப்ப நிலைமை எங்க கட்டுக்குள் இருக்கு''’என்றார் இறுக்கமான குரலில். இந்நிலையில், 6-ந்தேதி மாலையில் சிதம்பரத்தில் சரணடைந்தார் ஹஜ் முகமது.

எனினும்... அடுத்த நொடி என்ன நடக்குமோ என்ற பக்பக்கோடு... திருவிடைச்சேரி இன்னும் பதட்டத் தகிப்பு மாறாமல் பகீர் நிலையிலேயே இருக்கிறது.



கொலைகாரனின் கூட்டாளியான அதிகாரிகள்!


இருவரை சுட்டுக் கொன்ற ஹஜ் முகமது மீது கேரளா, மும்பை ஆகிய இடங்களில் மோசடி பாஸ்போர்ட் வழக்கு உள்ளது. உண்டியல் பிசினஸில் கில்லாடியான இவரிடம் லைசென்சுடன் 3 துப்பாக்கி கள் உள்ளன. மேலும் ஒரு துப்பாக்கியை லைசென்ஸ் இல்லாமல் வைத்திருக்கிறார். போலீசிடம் நல்ல செல்வாக்கு உள்ள ஹஜ் முகமது, எஸ்.பி. லெவ லுக்கு குறைவாக உள்ள எந்த காக்கி அதிகாரியிடமும் பேச மாட்டார். முன்னாள் ஐ.ஜி.காளிமுத்து, சஸ் பெண்டட் டி.ஐ.ஜி.முகமது அலி ஆகியோர் இவருக்கு மிகவும் நெருக்கம். அவர்களிடம் நேரடியாகவே போனில் பேசி, தன்னை நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வது வழக்கம். ஹஜ் முகமதை விசாரிக்கும் போது, அதிகாரிகளின் உடந்தை பற்றிய மேலும் பல விபரங்களும் வெளிவரும் என்கிறது காக்கி வட்டாரம்.

No comments:

Post a Comment