Tuesday, September 21, 2010

ராமரா? பாபரா?


செப்டம்பர் 24-ந் தேதி இந்தியாவின் ஜனநாயக பன்முகத்தன்மையை காப்பாற்றக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய விதத்தில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு அமையும் என்ற கருத்து அனைவரின் மத்தியிலும் நிலவுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு அவதாரங்களை எடுத்த இந்த வழக்கு, இப்போது ஒரு உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு பெஞ்ச்சின் தீர்ப்பில் அடுத்த கட்டத்தை அடையவிருக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் மற்றொரு தரப்பினர் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மேல்முறையீடு செய்ய இருப்பதால் 60 ஆண்டுகால நீதிமன்றப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆனாலும், இந்தத் தீர்ப்பின் தாக்கம் பலமாக இருக்கும் என்ற அச்சம் ஆளுங்கட்சியிடமும் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவிடமும் இருக்கிறது.

வரும் வெள்ளியன்று வெளிவரும் தீர்ப்பில் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்க இருக்கிறது. ஒன்று, பாபர் மசூதி இருந்த இடத்தின் கீழ்தான் ராமர் பிறந்தாரா என்பது முதல் கேள்வி. இரண்டாவது, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கே ஒரு கோயில் இருந்ததா, இல்லையா? என்ற கேள்வி. இதில் முதல் கேள்வியானது சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கேள்வி என்பது அடிப்படை அறி வுடைய அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. மத நம்பிக்கை அடிப்படையிலோ அல்லது மத துவேஷத்தின் அடிப்படையிலோ இங்குதான் ராமர் பிறந்தார் என்று வாதிட் டாலும்கூட, அங்குதான் பிறந்தார் என்பதற்கான எந்தவித ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. கைகேயிக்கு பிள்ளைப் பேறு பார்த்த மருத்துவச்சியைத் தவிர வேறு யாராலும் ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியாது. கைகேயி யின் மருத்துவச்சி யாரென்று வால்மீகிக்கே தெரிய வில்லை. ஆக, இந்த விஷயத்தில் சட்டரீதியாக நீதிபதிகள் எப்படி முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது மக்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது.


இரண்டாவதாக, மசூதி இருந்த இடத்தில் கோயில் இல்லை என்று கூறிவிட்டால், அந்த நிலம் முஸ்லிம் மக்களுக்கே சென்றுவிடும். அவர்கள் அதில் மசூதி கட்டுவது உள்பட என்ன வேண்டு மானாலும் செய்துகொள்ளலாம். ஆனால், கோயில் இருந்தது உண்மை என்றொரு நிலையை நீதி மன்றம் எடுத்தால்கூட, வி.ஹெச்.பியும் ஆர்.எஸ். எஸ்ஸும் அங்கு சென்று நிலத்தை கையகப்படுத் திக்கொள்ள முடியாது. 400 வருட வயதுடைய மசூதியை 1992ஆம் ஆண்டில் இவர்கள் இடித்துத் தள்ளியது அனைவரும் அறிந்ததுதான். இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்ன வென்றால், பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய வழிபாட்டுத்தலத்தில் வரலாற்றின் அடிப்படையில், முதல் வழிபாட்டுத் தலத்திற்குரிய மதத்தினர், பின்னால் வந்தவர்களுக்கு அதனைத் தர வேண்டியதில்லை என்பதே சட்ட முன்னுதாரணமாகும்.

1940ஆம் ஆண்டு இன்றைய இந்திய உச்சநீதி மன்றத்தின் முன்னோடியான பிரிவி கவுன்சில் என்றழைக்கப்பட்ட காலனி ஆதிக்க உச்சநீதி பரிபாலன அமைப்பு, லாகூரில் சாகித் கஞ்ச் மசூதி பற்றி அளித்த தீர்ப்புதான் இந்த முக்கிய முன்னுதாரணம். அங்கு 1722 முதல் ஒரு மசூதி இருந்து வந்தது. ஆனால், 1962ஆம் ஆண்டு சீக்கிய ஆட்சியின்கீழ் அந்தக் கட்டிடம் குருத்வாராவாக மாற்றம் பெற்றது. இது எங்களுடைய வழிபாட்டுத் தலம் எங்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று பல நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு, 1935ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் ஒரு வழக்கு தொடுத்தனர். பல்வேறு நீதி மன்றங்களைக் கடந்த இந்த வழக்கு 1940-ல் பிரிவி கவுன்சில் முன்னால் வந்தது. அதை முழுமையாக விசாரித்த பிரிவி கவுன்சில் இந்த இடத்தை சீக்கியர்கள் வக்ஃப் வாரியத்தின் நலனுக்கு எதிராக எடுத்திருப்ப தற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், எடுத்த 12 வருடங்களுக்குள் இது எந்தவிதமான சட்டமுறை களுக்கும் வராத காரணத்தினால் இந்த நிலத்தின் உரிமை குறித்து, 200 வருடங்கள் கழிந்த நிலையில் விவா திக்க முடியாது. ஆகவே, வரலாற்று ரீதியாக மசூதி யாக இருக்கிறதா அல்லவா என்பதல்ல பிரச்சினை.

எப்படி குடியுரிமை என்பது, இரண்டு தலை முறைகளாக ஒருவர் ஒரு நாட்டில் இருந்துவிட்டால் அவர் அந்த நாட்டின் குடியுரிமைக்குப் பாத்தியதாரர் ஆகிறாரோ அது போலவும், எப்படி நிலச்சுவான்தார் களுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள், அவர்கள் அங்கு இல்லாத நிலையில்- அங்கு வேலை செய்யும் தொழி லாளர்களால் தொடர்ந்து 14 ஆண்டுகள் விவசாயம் செய்யப்பட்டபின்- 3 தலைமுறை கழித்து திரும்பி வரும் நிலச்சுவான்தாரர்களின் வாரிசுகள் அதனை உரிமை கொண்டாட முடியாதோ, அதுதான் வழி பாட்டுத் தலங்களுக்கும் பொருந்தக்கூடிய பொது வான சட்டமாகும். காரணம், வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதை சொத்துப் பிரச்சினையாகவும் சொத்தின் வாரிசுதாரர் உரிமைப் பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்க முடியும் என்று தெளிவாகச் சொல்லியுள்ளது பிரிவி கவுன்சில். ஆக, பாபர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு இடத்தை 400 ஆண்டு கள் கழித்து உரிமை கொண்டாட வருவதற்கு சொத் துரிமை சட்டத்தின்கீழ் இடமில்லை என்பதே முதல் கருத்து. எனவே அந்த இடம் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி.க்கு செல்லும் வாய்ப்பு குறைவே.

அடுத்ததாக, சொத்து சட்டம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பொதுநல சட்டமும் உண்டு. சொத்து தகராறில் குற்றம் இழைக்கப்பட்டால் பொதுநல சட்டமும் சொத்து சட்டமும் இணைந்தே பார்க்கப் படவேண்டும் என்பது சட்டவிதி. உதாரணமாக, சொத்துக்கு ஆசைப்பட்டு தன் மூதாதையர் யாரையேனும் ஒருவர் கொன்றுவிட்டால் அவர் வாரிசுதாரராகும் உரிமையை இழந்துவிடுகிறார். பாபர் மசூதி வழக்கைப் பொறுத்தவரையில், மசூதி இடிப்பு என்பது நீதியரசர் ராஜேந்தர் சச்சார் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ம்ன்ழ்க்ங்ழ் ம்ர்ள்ற் ச்ர்ன்ப் அதாவது, மிக மோசமான திட்டமிட்ட கொலை. இந்த விதத்தில் பார்க்கும்போது, நிலத்தை அபகரிப்பதற்காக அங்கிருந்த வழிபாட்டுத் தலத்தை அழித்த காரணத்தினால் நிலத்தை பெறும் உரிமையை இந்துத்வா அமைப்புகள் இழந்துவிடுகின்றன.





பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு சில இஸ்லாமிய அமைப்புகள் இந்துத்வா அமைப்புகளைப் போலவே அனுசரித்து போகக்கூடிய தன்மை யற்றவையாக மாறியது உண்மை. ஆனால், பெரு வாரியான முஸ்லிம்கள் இந்தியாவின் பன்முக அமைப்பினை ஏற்றுக்கொண்டு, தங்களுக்கான அடையாளத்தை இழக்காமல் நம்பிக்கையுடன் இருப்பதை நாம் மறக்கக்கூடாது. 1947ல் மதத்தின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோதுகூட, இந்தியா வை விட்டு வெளியேறிய முஸ்லிம்களைவிட இந்தியாவி லேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 75% அதிகமாகும். இன்று, உலகத்தில் இந்தோனேஷியா வுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இரண்டாவது நாடு இந்தியாவாகும். ஆக, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு காரணம், பெருவாரியான இந்துக்களின் பரந்த மனப்பான்மை என்ற பொய்முகத்தைத்தாண்டி, இந்த நாட்டின் மீதும் இந்த மக்களின் மீதும் சிறுபான்மையினர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் அடிப்படை காரணம் என்பதை உணரவேண்டும்.

சாதகமான தீர்ப்பு வந்தாலும், பாதகமான தீர்ப்பு வந்தாலும் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற தெளிவில்லாமலேயே இருக்கிறார்கள் இந்துத்வா தலைவர்கள் என்பது நிதர்சன உண்மை. 1986 முதல் 96 வரையிலிருந்த தீ உமிழும் மொழிகள் இன்று பரிவாரத் தலைவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரையில் அயோத் தியா விவகாரம் 80-களின் இறுதியிலும் 90களிலும் இருந்த அளவுக்கு, மக்களைத் திரட்டக்கூடிய ஒரு ஆயுதமாக இப்போது இல்லாமல் போய்விட்டதுதான்.

இதில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், 1992-ல் மசூதி இடிக்கப்பட்டபோது அதன் செயல்தலைவராய் விளங்கிய அத்வானி இப்போது கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். 92-ல் கதாநாயகனான கல்யாண்சிங், எந்தவித அடையாளமும் இல்லாதவ ராக மாறியிருக்கிறார். அவர் செப்டம்பர் 14-ந் தேதி அயோத்தியில் நடத்திய போராட்டத்தில் அவரும் அவரது நிழலும் மட்டுமே கலந்து கொண்டதை டெலிவிஷனைப் பார்த்தவர் களுக்குத் தெரியும். இன்னும் ஒரு தள்ளு தள்ளுவோம் என்று கோஷம் எழுப்பிய சாத்வி ரிதம்பரா இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தனியாக இருக்கிறார். உமாபாரதியும் பஜ்ரங்தள் நிறுவனரான வினய் கட்டியாரும் தங்களுடைய ஆகிருதி மிகச் சுருங்கி, கட்சியில் மீண்டும் தங்களுக்கு ஒரு இடம் கிடைக்காதா என்ற ஆவலில் அலையும் நிலையில் இருக்கி றார்கள்.

அடுத்ததாக, 92-ல் பாபர் மசூதி இடித்தபிறகு ஒரு புதிய தலைமுறை யையே இந்த நாடு கண்டுவிட்டது. இந்தத் தலைமுறையினர் தாராள மயமாக்கல், தொழில்நுட்பத்தின் பரவல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் கவர்ச்சியில் இந்துத்வாவை விட்டு வெளியேற ஆரம் பித்துவிட்டனர் என்ற உண்மையை யும் நாம் மறுக்க முடியாது. 1991-க்கு முன்பிருந்த வணிகம் சார்ந்த வியாபாரிகளும் தொழிலதி பர்களும் காங்கிரசின் இடதுசாரித்தன்மைக்கு எதிரான நிலையை பா.ஜ.க எடுத்து, தங்கள் நலனைப் பாதுகாக்கும் என அதற்கு பணமளித்து வந்தது உண்மை. ஆனால், தாராளமயமாக்கலின் தந்தையான மன்மோகன்சிங்கே பிரதமராக இருக்கும் ஆட்சி, தங்களுடைய நலனை மிக அதிகம் பாதுகாக்கும் என்று முடிவெடுத்திருக்கிற காரணத்தினால் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கடந்த 7 ஆண்டுகளில் குறைந்திருப்பதை கண் கூடாக காணமுடிகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது 1980-களின் இறுதியில் இருந்த தீவிர இந்துத்வா வெறியை, அயோத்தி தொடர்பான தீர்ப்புக்கு பிறகு இந்துத்வா அமைப்புகளால் தூண்ட முடியாது என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது

No comments:

Post a Comment