Wednesday, June 9, 2010

இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள்


என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி

இறுதி நாள் -19 மே 2009

இறுக்கமான முகத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரன் குனிந்து பார்த்தார். உடலைக் கவனித்தார். பெல்ட்டைப் பார்த்தார். அடையாள அட்டையை நோக்கினார். துப்பாக்கியை ஆராய்ந்தார். அனைத்தும் அவரது முன்னாள் தலைவருடையவை.சில கணங்களுக்குப் பின் உலகுக்கு அறிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார்.

கர்ணல் கருணா என்றழைக்கப்படும் முரளிதரனுக்கு அது ஒரு சோகமான தருணம். ஒரு காலத்தில் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பின் அடிமட்டத்தில் சேர்ந்து சிறிது சிறிதாக உயர்ந்து அந்த அமைப்பின் மிகவும் சிறந்த தளபதிகளில் ஒருவராக மிகவும் நம்பத்தகுந்தவராக ஆனார். அதே அமைப்பிலிருந்து 2004 இல் விலகினார்.

இப்போது இலங்கை அரசில் ஓர் அமைச்சராக இருக்கும் அவர், போர் நிகழ்ந்த வடகிழக்கு இலங்கையில் சிறுமண் திட்டுக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்; உலகிலேயே மிகவும் அபாயகரமான தீவிரவாதத் தலைவர் என்று கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார் என்று அரசு அறிவித்தது உண்மை தான் என்பதை உலகுக்குப் பறைசாற்ற.

அடிமட்டத்திலிருந்து ஒரு கெரில்லாப் படையை உருவாக்கி, அதில் வலுவான ஒரு தரைப்படை, திறமையான ஒரு கடற்படை, அப்போது தான் முளைத்துள்ள ஒரு விமானப்படை என அனைத்தையும் கொண்டிருந்தார் பிரபாகரன். பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கைக்குள் வைத்திருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை ஆட்டிப்படைத்து வந்தார். அப்படிப்பட்ட வலுவான ஒரு தலைவருக்கு ஏற்பட்டது மிகச் சாதாரணமான ஒரு முடிவு. ஆனால் இலங்கை இராணுவத்துக்கு அது அவ்வளவு எளிதான ஒரு வெற்றியாக இருக்கவில்லை.

33 மாதங்கள் கடுமையான , தொடர்ச்சியான, தீவிரமான போராட்;டத்துக்குப் பிறகே, பிரபாகரனை ஒரு சதுப்புநிலக் காட்டுப் பகுதிக்குள் குறுக்கி கொல்ல முடிந்தது.பிரபாகரன் கொல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின் இந்தப் போரை வழி நடத்திய இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் பேசினார். பிரபாகரனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் கடைசி நேரத்தில் இராணுவத்தை ஏமாற்றி, தப்ப முயற்சி செய்து, ஒரு கடுமையான தாக்குதலை நிகழ்த்தினராம். அவரது அலுவலகத்தில் நடந்த நேர்முகத்தின் போது பிரபாகரனின் கடைசி சில மணிகளைப் பற்றி விளக்கிய பொன்சேகா இவ்வாறு கூறினார்.

18 மே இரவு, 19 காலை, விடுதலைப் புலிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். நந்திக்கடல் காயல் பகுதியில் எங்களது முதல் பாதுகாப்பு வளையத்தை தாக்கி உடைத்து வெளியேறினர். இந்த மூன்று குழுக்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் ஜெயம், பொட்டுஅம்மான், சூசை ஆகியோர்.ஆனால் முதல் வளையத்துக்குப் பின் இரண்டாவது மூன்றாவது வளையங்கள் இருக்கும் என்பதை அவர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்களும் தப்பித்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் உண்மையில் 250 பேர் அடங்கிய புலிகள் எங்களது முதலாம், இரண்டாம் பாதுகாப்பு வளையங்களுக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டனர். அன்று இரவு நடந்த கடுமையான போருக்குப் பின், கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களுமே கொல்லப்பட்டனர். 19 காலை, பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஜெனரல் பொன்சேகா நிதானமாக, சுருக்கமாகச் சொன்ன இது அனைத்துமே தொலைக்காட்சி வாசகர்களுக்கானது. இந்தியாவின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி என்.டி.டி.விக்காக நான் அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். அவரது பேச்சில் 18,19 மே மாதத்தில் நடந்த முழு விவரமும் வெளிவரவில்லை. பின்னர் பலருடன் பேசியதில் அந்த இரு நாள்களில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன்.

பொன்சேகா சொன்னது போல, இறுதிப்போர் நடந்தது மிகக் குறுகிய மண் திட்டில், கிழக்கில் இந்தியப் பெருங்கடலாலும் மேற்கில் நந்திக்கடல் காயலாலும் சூழப்பட்ட பகுதி. கிழக்கில் கடற்கரை. மேற்கில் நீர் நிரம்பி இருக்கும் சதுப்பு நிலக் காடுகள். இடையில் மண் திட்டு.அந்தப் பகுதியில் ஒரு முக்கிய சாலை இருந்தது. வடமேற்கு, தென்கிழக்கு அச்சில் காயல்களை நோக்கிச் சாய்ந்தபடி செல்லும் ஏ- 35 பரந்தன்- முல்லைத்தீவு நெடுஞ்சாலை, காயலை நெருங்குவதற்கு முன் இயற்கைத் தடுப்பரண்கள், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்புக்கள் ஆகியவற்றைத் தாண்டித்தான் செல்ல முடியும்.
விடுதலைப் புலிகளின் கடைசி நிலத்துண்டை அணுக இராணுவம் இரு தாழ்ந்த பாலங்கள், ஒரு விரிந்த கடற்கடை, புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பல மேடுகள், பள்ளங்கள் ஆகியவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைமை மீதான இந்தக் கடைசி முற்றுகையைச் செயற்படுத்த ஜெனரல் பொன்சேகா மூன்று இராணுவப்படைப்பிரிவுகள், ஒரு சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை இறக்கியிருந்தார். 53 வது டிவிஷனுக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தலைமை வகித்தார். கர்ணல் ஜி.வி. ரவிப்பிரியா தலைமையிலான டாஸ்க் போர்ஸ் 8 க்கும் அவரே பொறுப்பு. கடந்த 33 மாதங்களாக நான்காம் ஈழப்போரில் பெரும் பங்கு ஆற்றிய பிரிகேடியர் ஷவீந்திர சில்வாவின் 58 வது டிவிஷன் இப்போதும் முன் செல்லும் படையாக இருந்தது.

இறுதியில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான 59 வது டிவிஷன் வட்டுவாகல் தரைப்பாலத்துக்குத் தெற்கே தடுப்பு விய+கம் அமைந்திருந்தது. வடக்கிலிருந்து மற்ற இரு படைப்பிரிவுகளும் தாக்குதலைத் தொடங்கியிருந்தன. இந்த மாபெரும் படைக்குவியலுக்கு முன், பிரபாகரனும் விடுதலைப் புலிகளின் தலைமையும் முற்றிலுமாகச் சிக்கிக் கொண்டனர்.

பிரபாகரன் தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. காயல் வழியாக. இலங்கை இராணுவத்துக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனாலேயே முன்னெச்சரிக்கையாக அங்கும் படைகளை நிறுத்தியிருந்தனர்.

இறுதிப்போர் மே 17 அன்றே தொடங்கிவிட்டது. போரில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் தகவல்களின்படி மே 17 அன்றே புலிகள் தப்பிக்க முயற்சி எடுத்தனர். ஜெயத்தின் தலைமையில் 150 புலிகள் சிறு படகுகள் மூலமும் அன்று காலை 3 மணிக்கு இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். கெப்பிலாறு தடுப்பரணுக்கு அருகில் காயலின் மேற்குக் கரையில் புலிகள் இறங்கினர்.

அங்கே 5 வது விஜயபா இன்பண்ட்ரி றெஜிமென்ட்டும் 19 வது ஸ்ரீலங்கா லைட் இன்பன்ட்ரியும் தயாராக இருந்தன. காயலின் மேற்கு கரையில் மூன்று மணி நேரம் நிகழ்ந்த கடுமையான போரில் 148 புலிகள் கொல்லப்பட்டனர். இராணுவத்துக்கும் கடுமையான உயிர்ச்சேதம்.ஆனால், புலிகளால் இராணுவத்தில் தடுப்பரணை உடைக்க முடியவில்லை. இந்தச் சண்டையில் இருந்து காயலின் கரையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்து முதியங்காட்டுக்குள் தப்பிச் செல்ல பிரபாகரனுக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தர புலிகள் முயற்சி செய்கிறார்கள் என்பது இராணுவத்துக்குப் புரிந்துவிட்டது.

ஜெனரல் பொன்சேகா என்னிடம் சொன்னார். “விடுதலைப் புலிகள் இந்த வழியைத் தான் முதலில் பின்பற்றுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு பகுதியைத் தக்க வைத்திருந்தார்கள் என்றால் காயல் வழியாகத் தலைவர்கள் அனைவரும் தப்பி, முதியங்காட்டுக்குள் சென்று மறைந்திருப்பார்கள். அவர்களைப் பிடிப்பது இயலாததாகி இருக்கும். கடந்த பல வருடங்களில் அவர்களது செயற்திட்டங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் நாங்கள் அதனை முன்னதாகவே எதிர்பார்த்திருந்தோம்.




போர் முடியும் நிலையில், விடுதலைப் புலிகள் பிணையாக வைத்திருந்த கடைசி சிவிலியன்களும் தப்பித்து அரசுகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துவிட்டனர். அதனால் நன்கு பயிற்சி பெற்றிருந்த புலிகளைத் தாக்குவதில் இராணுவத்துக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கவில்லை. கொழும்பில் இருந்தபடி ஜெனரல் பொன்சேகாவே நேரடியாக நிலைமையைக் கண்காணித்து வந்தார். போர்க்களத்தில் தளபதிகள் பிரபாகரனைப் பிடிக்க நேர்த்தியான திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

இதற்கு இடையில், விடுதலைப் புலிகள் தோற்றுவிடுவது உறுதி, பிரபாகரன் பிடிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று தெரிந்த காரணத்தால் உலக ஊடகங்களைச் சேர்ந்த அனைவரும் கொழும்புக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். நானும் மே 16 அன்று விமானத்தில் கொழும்பு சென்றடைந்தேன். அன்றோ இந்தியர்கள் அனைவரும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளைக் காண்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டியிலேயே கண் வைத்த வண்ணம் இருந்தனர்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு பத்திரிகையாளர்கள் நாங்கள் அனைவரும் போர் முனையில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள, எங்களுக்குத் தெரிந்த அனைவரிடமும் தொடர்;பு வைத்துக் கொண்டு இருக்கை நுனியில் உட்கார்ந்திருந்தோம். ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரே ஒரு செய்தி தான் வந்து கொண்டிருந்தது. “விடுதலைப் புலித் தலைமை முழுவதும் ஒரு சிறுதுண்டு நிலத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர்|| அதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் கிடையாது.

மே17 இரவு ஆனதும், விடுதலைப் புலிகளிடமிருந்து கடுமையான தாக்குதலை இராணுவம் எதிர்நோக்கியது. எதிர்பார்த்தது போலவே மே 17 நள்ளிரவுக்குப் பின் புலிகளின் தாக்குதல் ஆரம்பித்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் டிபன்ஸ் எல்கே, 17 ஆம் கெமுனு கண்காணிப்பு றெஜிமெண்டின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் கீர்த்தி கொட்டாச்சியை மேற்கோள் காட்டி, இந்தத் தாக்குதல் வஞ்சகமான முறையில் நடைபெற்றது என்றது. கொட்டாச்சியின் தகவலின்படி, சிவிலியின் உடையில் இருந்த சில தீவிரவாதிகள், காயல் கரையைக் காத்துக் கொண்டிருந்த துருப்புக்களை அணுகி, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது மே 18, அதிகாலை 2.30 மணி.

“எனது படைகள் தான் காயமுள்ளிவாய்க்கால் சிவிலியின் மீட்புப் புள்ளியில் காவல் காத்துக் கொண்டிருந்தன. காயல் கரை வழியாக வந்த சில தீவிரவாதிகள் எங்கள் பாதுகாப்பு வளையத்துக்குச் சற்று முன்னதாக, சிறு தீவுக் குழுமங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர். ஒரு சிறு குழு மட்டும் எங்கள் அதிகாரிகளிடம் வந்து, அவர்கள் குழுவில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறும் கேட்டனர் என்று கர்ணல் கொட்டாச்சி தெரிவித்தார். ஆனால், டாஸ்க்போர்ஸ்8 இன் தலைவர் கர்ணல் ரவிப்பிரியாவும் பிரிகேட் கமாண்டர் லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேவும் கர்ணல் கொட்டாச்சியிடம் ஏற்கனவே விரிவாகப் பேசியிருந்தனர். விடுதலைப் புலிகள், சிவிலியன் வேடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதைச் சொல்லியிருந்தனர்.

“அனைத்துச் சிவிலியன்களையும் ஏற்கனவே காப்பாற்றி விட்டதால், காலை விடிவதற்கு முன் யாரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று நான் கூறிவிட்டேன். காலை 3 மணி ஆனபோது மீட்புப் புள்ளியில் இருந்த அதிகாரி, சிவிலியன் குழு என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் வன்முறையில் இறங்குவதாகவும் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முற்படுவதாகவும் தெரிவித்தார். உடனே நிலைமையைக் கட்டுப்படுத்த, வானை நோக்கி இரு முறை சுடுமாறு அவருக்கு ஆணையிட்டேன். உடனே 200 புலிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே எங்கள் பகுதியைத் தாக்கத் தொடங்கினர் என்றார் கர்ணல் கொட்டாச்சி.

இறுதி யுத்தம் நிஜமாகவே ஆரம்பித்துவிட்டது. 681வது பிரிகேடின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே, இந்தச் சண்டையைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொன்னார்: “தீவிரவாதிகள் எங்களது இரண்டு பதுங்கு குழிகளைக் கைப்பற்றினர். எங்களது பாதுகாப்பு வளையத்தில் 100 மீட்டருக்கு இடைவெளியை ஏற்படுத்தினர். ஆனால் முதலாவது தாக்குதலுக்குப் பிறகு, உள்ளே நுழைந்த அனைவரும் எங்களது மெஷின் துப்பாக்கியின் வீச்சுக்குள் வந்தனர். அவர்கள் அந்தக் காயல் கரையிலேயே மடிந்தனர். எங்கள் தரைப்படையும் டாஸ்க் போர்சும் சுமார் 100 புலிகளைக் கொன்றிருப்பர். அதில் சில தலைவர்களும் அடக்கம். அவர்கள் தண்ணீருக்குள்ளிருந்து வெளிவரும் முன்னரேயே கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, காலை விடியும் போது 100 புலிகளைக் கொண்ட மற்றுமொரு குழு வட்டுவாகலுக்கு வடக்கே தடுப்பாக இருந்த 58வது பிரிவைத் தாக்கியது. இந்தப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஏ- 35 நெடுஞ்சாலையில் கடற்கரைப் பகுதிக்கு நீந்தி வந்த புலிகளில் பெரும்பான்மையானோர் 58வது டிவிஷனால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சதுப்பு நிலக் காடுகளில் ஒழிந்திருந்த புலிகள் சுமார் 100 பேர் டாஸ்க்போர்ஸ் 8 ஆலும் தரைப்படையினராலும் தேடிப் பிடித்துக் கொல்லப்பட்டனர்.

இராணுவத்தின் கையில் சிக்கி இறந்த முதல் போராளிப் படைக்கு பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி தலைமை தாங்கினார். அந்தக் குழுவினர் வந்து இறங்கிய இடத்திலிருந்து 250 மீட்டர் தூரம் கடப்பதற்குள்ளாகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். சார்லஸ் ஆன்டனியின் குண்டு துளைத்த உடல் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டது.

மே 18,

இந்தச் செய்தியை நாங்கள் தொலைக்காட்சியில் அறிவித்து, தூரத்தில் கொழும்பில் இருந்தபடி அதன் விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதற்குள்ளாக வதந்திகள், அரை உண்மைகள், பொய்கள் என அனைத்தும் முடிவே இல்லாமல் பரவ ஆரம்பித்தன. அன்று முழுதும் பிரபாகரனின் இருப்பிடம் பற்றி முற்றிலும் மாறுபட்ட பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாயின. ஒரு தகவல், பிரபாகரன் முதியங்காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டார் என்றது. பிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை, விடுதலைப் புலிகளின் உளவு அமைப்புத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் கைப்பற்றப்பட்ட ஒரு அம்புலன்ஸில் ஏறித் தப்பிச் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாமல் எரிந்து போயின என்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி மற்றொரு தகவல். இந்தத் தகவல்கள் எவையுமே உண்மை இல்லை என்று பின்னர் தெரிய வந்தது.

ஒரு மூத்த இராணுவ அதிகாரி பின்னர் தெளிவுபடுத்தினார். ஏயார் மொபைல் பிரிகேடின் ஆம்புலன்ஸ் வாகனம் அது. அதனைத் தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்று தாக்கியபோது அது தீப்பிடித்து எரிந்தது. எரிந்து நாசமான வண்டியின் உள்ளே ஓர் உடல் உள்ளது என்று படைவீரர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த உடல், பார்க்க பிரபாகரனின் உடலை ஒத்திருந்தது என்றனர்.ஆனால் அந்தத் தகவல் தவறானது என்று நிரூபணம் ஆனது

ஆனால் இந் விளக்கம் வர நிறையத் தாமதம் ஆனது. எனவே 18 மே அன்று ஊடகங்களில் இருந்த நாங்கள் இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தோம். இத்தனைக்கும் பாதுகாப்பு அமைச்சகமும் இராணுவமும் இந்தத் தகவலை அதிகாரப+ர்வமாக உறுதி செய்ய மறுத்திருந்தன.

போர்முனையில் சுற்றிவளைக்கும் இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல விடுதலைப் புலிகளின் தலைமை செய்த அனைத்து முயற்சிகளையும் படைகள் தடுத்துவிட்டன. நாள் முழுவதும் போர் நடக்கும் பகுதியில் எஞ்சியுள்ள புலிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 350க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடைத்தன. ஆனால் ஒவ்வொன்றும் யாருடைய உடல் என்று அடையாளம் காண்பதில் நிறையச் சிரமங்கள் இருந்தன. உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவவர்கள் அந்த வேலையில் இறங்கினர். தம்மிடம் உள்ள புகைப்படங்களைக் கொண்டு இறந்த ஒவ்வொருவரையும் கவனமாகப் பார்க்கத் தொடங்கினர்.

அன்று மாலைக்குள்ளாக, கொல்லப்பட்டதில் 30 க்கும் மேற்பட்டோர் விடுதலைப் புலி அமைப்பின் மேல் நிலை, இடைநிலைத் தலைவர்கள் என்று இராணுவம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோர் எங்குமே காணப்படவில்லை.

எனவே கண்காணிப்பு தொடர்ந்து பலமாகவே இருந்தது. பிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் அங்கே தான் எங்கேயோ பதுங்கியுள்ளனர் என்பதை நன்கு உணர்ந்திருந்த படைத்தளபதிகள் ஒரு துளி கூடக் கவனம் சிதறிவிடக்கூடாது. துருப்புக்கள் கண்காணிப்பை தளர்த்திவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தனர். அடுத்த 12 மணி நேரம், மிகவும் முக்கியமானவை.

இலங்கையைப் பொறுத்தமட்டில் 19 மே 2009 மிக முக்கியமான நாளாக இருந்தது. காலை 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தன் உரையைத் தொடங்கினார். தமிழில் பேச ஆரம்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் ராஜபக்சவும் பிரபாகரன் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதனால் இராணுவம் போரை முடித்துவிட்டதா என்ற கேள்விக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால் யாருக்குமே தெரியாமல் அன்று அதிகாலையிலேயே 25 ஆண்டுகாலப் போர் அதன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு சதுப்புநிலக் காட்டில் கடும் போர் நிகழ்ந்திருந்தது.

18 மே இரவு முழுவதும், 19 மே அதிகாலையிலும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே, கர்ணல் ரவிப்பிரியா, லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே ஆகியோர் கரயமுள்ளிவாய்;க்கால் தரைப்பாலத்தின் மீது எப்படி இறுதித் தாக்குதலைச் செய்வது என்று திட்டமிட்டபடி இருந்தனர்.

அதிரடிப்படையினர் அதற்கு முதல் நாளே பெரும் பகுதி சதுப்பு நிலத்தை முழுவதுமாகச் சோதனை செய்திருந்தனர். அன்று 8.30 மணிக்கு மிச்சம் உள்ள சதுப்பு நிலங்களை டாஸ்க்போர்ஸ் 8ம் 4ம் விஜயபா இன்பண்ட்ரி றெஜிமெண்டும் சோதனை செய்யத் தொடங்கினர்.

லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேயுடன் 4 வது விஜயபாவின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் ரோஹித அலுவிஹாரேயும் நேரடியாகப் படைகளுக்குத் தலைமை தாங்கி முன்னே சென்றனர். 8 வீரர்கள் கொண்ட இரு குழுக்கள், 4 வீரர்கள் கொண்ட ஒரு குழு என மூன்று குழுக்கள் சதுப்பு நிலத்தில் நீரில் அமிழ்ந்தபடி தேடுதலைத் தொடங்கின.

சார்ஜண்ட் எஸ்.பி.விஜேசிங்க தலைமையிலான முதல் குழு சதுப்பு நிலத்தில் நுழைந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் எகிற ஆரம்பித்தன. நெஞ்சளவு நீரில், முள் புதர்களுக்குப் பின் வீரர்கள் பதுங்கவேண்டியிருந்தது. ஒரு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, விஜேசிங்கயின் படை சுமார் 50 மீட்டர் தூரம் முன்னேறியது. அங்கே ஐந்து உடல்கள் கிடந்தன. இறந்தவர்கள் உடல்களில் பிஸ்டல்களும் ரிவால்வர் துப்பாக்கிகளும் கிடந்தன.

விஜேசிங்கவுக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. அவர்கள் மிக முக்கியமான தலைவர்களுக்கு அருகில் இருக்கின்றார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களினக் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே பிஸ்டல்களை வைத்திருக்கலாம்.

சார்ஜண்ட் உடனே தன் பிரிகேட் தலைவருக்கும் கமாண்டிங் அதிகாரிக்கும் தகவல் அனுப்பினார். சில நிமிடங்களுக்குள்ளாக இறந்த ஒருவரது உடல் வினோதனுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது.; பிரபாகரனின் உள்வட்டப் பாதுகாப்பு அணியின் மூத்த மெய்க்காப்பாளர்களிர் வினோதன் ஒருவர். “உடனேயே இது முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது| என்று லலாந்த கமகே பின்னர் தெரிவித்தார்.

தங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம் என்று படைகளுக்குப் புரிந்துபோனது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தன் அணியின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் நெருக்கமாகப் பார்த்து வந்தார்.அவர் உடனேயே சார்ஜண்ட் விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு விய+கத்தில் நிற்கச் சொன்னார். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்குமாறு கூறினார். 8 பேர் அடங்கிய தரைப்படைக் குழு ஒன்றும் நால்வர் அடங்கிய டாஸ்க் போர்சும் விஜேசிங்கவின் குழுவுக்குப் பக்க பலமாக உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த இரண்டாவது குழுவுக்கு சார்ஜண்ட் டி.எம்.முத்துபண்டா தலைமை தாங்கினார்.

இந்த அணியினர் முன்னேறும்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சதுப்பு நிலக்காட்டில் அமைதி.இரு அணிகளும் மிகவும் மெதுவாகப் புதர்களுக்கு இடையே முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன.

அதில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒருவர். இலங்கை அரசை 30 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தவர்.

அப்போது காலை 8.30 மணி.19 மே 2009.

உடனே இராணுவத் தளபதிக்குத் தகவல் பறந்தது. ஆனால் உலகுக்குத் தகவலை அறிவிப்பதற்கு முன் ஜெனரல் பொன்சேகா இருமுறை உறுதி செய்து கொள்ள விரும்பினார்.பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனான ஆலோசனைக்குப் பிறகு விநாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கர்ணல் கருணாவை அழைத்து பிரபாகரனது உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் சில நாட்களுக்கு முன் இலங்கை அரசிடம் தஞ்சம் புகுந்திருந்த விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளர் தயா மாஸ்டரையும் போர் முனைக்கு அழைத்த வந்தனர். இருவருமே, நந்திக்கடல் காயலில் வீழ்ந்து கிடந்த உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்தனர். உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்த பிரபாகரனின் கதை முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி முழுதானது. அப்போது தான் நாடாளுமன்றத்தில் தன் பேச்சை முடித்திருந்த குடியரசுத் தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்குள் இராணுவ உடையில் பிரபாகரனின் உடல் உலகின் அனைத்துத் தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

யாராலும் இதனை நம்பமுடியவில்லை. விடை தெரியாத பல கேள்விகள் தான் எஞ்சியிருந்தன.

எத்தனையோ புதுமையான தீவிரவாத வழிமுறைகளைப் புகுத்திய ஒரு மனிதர், எப்படி ஒரு சாதாரண சாவைச் சந்தித்திருக்கமுடியும்? தப்பிக் அவரிடம் வழியே இருக்கவில்லையா? அவர் ஏன் பிற விடுதலைப் புலி வீரர்களைப் போல சயனைட்டைச் சாப்பிட்டு உயிர்துறக்கவில்லை? எவ்வளவோ இன்னல்கள் வந்த போதும் ஆச்சரியமூட்டும் வகையில் எதிர்த்தாக்குதல்களைப் புரிந்த ஒருவர் இம்முறை ஏன் அப்படி ஏதும் செய்து நிலைமையை மாற்றவில்லை?

அவரது நெருங்கிய கூட்டாளிகளால் அல்லது குடும்பத்தினரால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியும். ஆனால் அவர்கள் அனைவரும் இறந்திருந்தனர்.

பிரபாகரன் இறந்து பல நாள்கள் ஆன பிறகும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. எப்படி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் இராணுவம் உயிருடன் பிடித்து, அவர்களைத் துன்புறுத்தி ஒவ்வொருவராக கொலை செய்தது என்றது ஒரு வதந்தி.

மற்றொரு வதந்தியில் தங்களை இராணுவம் சுற்றி வளைத்து விட்டது என்பதை அறிந்த பிரபாகரன், தன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா(23), இளைய மகன் பாலச்சந்திரன் (11) ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக்கொன்றதாகச் சொன்னது.

ஆனால் இந்த வதந்திகள் எதையுமே உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரம் இலங்கை அரசும் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பற்றி அமைதி காத்தது. விளைவாக வதந்திகள் பரவுவதை தடுக்க வழியில்லாமல் இருந்தது.

பிரபாகரனின் இறப்புக்கு அடுத்த வாரம், புலி ஆதரவு இணையத்தளங்களும் தமிழ் இதழ்களும் செய்தித்தாள்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனைப் போன்ற வேறு ஒருவரது உடல் என்றும் எழுதின.

ஆனால் இலங்கை அரசைப் பொறுத்தமட்டில் இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியே. ஒரு மாதம் கழித்து டி.என்.ஏ. சோதனை மூலம் நந்திக்கடல் காயலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்யப்பட்டது.


பிரபாகரனின் அழிவுக்கு காரணம் என்ன?

விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் “கர்ணல் கருணா, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய மறுநாள் என்னிடம் சொன்ன ஒரு வாக்கியம், பிரபாகரனின் சுய அழிவைத் தெளிவாக விளக்குகின்றது. தன் முன்னாள் தலைவரின் கோரமான சாவுக்காகத் தான் வருந்துவதாக என்னிடம் ஒப்புக் கொண்ட கருணா சொன்னார். “ பிரபாகரன் அமைதிக்கான மனிதர் கிடையாது. அவருக்கு அழிக்க மட்டுமே தெரியும். ஆக்க அல்ல

இந்த உலகுக்கு மனித வெடிகுண்டுகளை அறிமுகப்படுத்திய ஒருவரைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு இது. பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் கொல்வதற்கு ஆணையிட்டவர் பிரபாகரன். ஆயிரக்கணக்கான இளம் ஆண்களையும் பெண்களையும் கவர்ந்து தமிழ் ஈழத்துக்காகத் தம் உயிரையும் கொடுக்குமாறு தூண்டியவர் பிரபாகரன். ஆனால், எப்போது நிறுத்திக் கொள்வது என்று பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து பெற்ற வெற்றிகள், விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தன் திறமை மீது அதீத தன்னம்பிக்கையையும் சுயதிருப்தியையும் வளர்த்துவிட்டது. அதனால் மாறும் நிலைமைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பயங்கரவாதியாகவே வாழ்ந்து ஒரு பயங்கரவாதியாகவே மறைந்தார். ஒரு அரசியல் தலைவராக அவர் முன்னேறவே இல்லை.

தன் அழிவுக்கான வித்தை பிரபாகரன் தானே விதைத்தது, 2008 க்குப் பிறகான காலகட்டத்தில் தான் என்கிறார் கருணா. நார்வே முன் வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பிரபாகரன் அதை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கவே இல்லை.

என்னுரை

இந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கும்போது தான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியது. உத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த இhணுவப்படைக் கல்லூரியில் “ இராணுவத்துக்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவு|| என்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்தப் பேச்சின் போது, சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய இராணுவத்தினர் ஏகப்பட்;ட கேள்விகளைக் கேட்;டிருந்தனர். நான் இலங்கைக்குச் சென்று அங்கு நடந்த போரை , என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால் அப்போது தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.

என் அனுபவங்களை இந்திய இராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்டபோது தான் இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம் என்ன என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது என்று தெரிந்து கொள்ள விரும்பினர். எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை இராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இந்தப் புத்தகம் இலங்கைப் பிரச்னையை ஆழமாக அலசும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது படைத்தளபதிகளும் அரசியல் இராணுவச் செயல்திட்டங்களை வகுத்து, இதுவரையில் வெல்லவே முடியாமல் இருந்த ஓர் அமைப்பை வெற்றி கண்டனர் என்பது பற்றியே என் கவனம் முழுவதும் இருக்கும்.

2006 முதலாகவே போரின் முன்னணியில் என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிருபராக இருந்து வந்துள்ளேன். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல நண்பர்கள் எனக்குப் பல தகவல்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரது பெயரையும் வெளியில் சொல்ல அனுமதி தரவில்லை. எனவே இந்தப் புத்தகத்தில் பலரது பெயர்கள் வெளிவராது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாகச் சொல்ல முடியும். மூத்த பத்திரிகையாளர், இலங்கை விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே. பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோதபாய ராஜபக்ச, ஜெனரல் சரத் பொன்சேகா, ஹை கமிஷனர் ரொமேஷ் ஜயசிங்க, இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் பலித கொஹேன, டெல்லி இலங்கைத் தூதரகத்தின் சஜ்ஜேஷ்வர குணரத்ன, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் லக்ஸ்மன் ஹ_லுகல்ல, இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இலங்கை ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் துஷாரா, உபேந்திரா, தாஜ் சமுத்ராவின் பத்மனாபன், இந்தப் போரைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடித்த என்னுடைய சக அலுவலகர்கள் தனபால், சுகுமார் ஆகியோர்.

இந்தப் புத்தகத்தை எழுத அனுமதியும் விடுப்பும் கொடுத்த என்.டி.டி.வி யின் ராதிகா ராய், பிரணாய் ராய், பர்க்கா தத்,சோனியா சிங் ஆகியோருக்கு நன்றி. வீட்டில், என் மனைவி; நேஹா, மகன்கள் ஹர்ஷ், உத்கர்ஷ் ஆகியோர் நான் அவ்வப்போது காணாமற் போவதையும் என் ஒழுங்கற்ற செயல்களையும் சந்தோஷமாகப் பொறுத்துக் கொண்டனர்.இலங்கையின் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதில் பலர் எனக்கு உதவியளித்துள்ளனர். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை முழுவதும் என் பொறுப்பே.

நிதின்.ஏ.கோகலே

________________________________________________________________________________________

பின் அட்டை

இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும் படுகொலைகளாலும் குண்டு வெடிப்புக்களாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் விளைவே விடுதலைப் புலிகள் இயக்கம்.

புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்தி வந்த போர், மகிந்த ராஜபக்சவின் வருகைக்குப் பிறகு புதுவடிவம் கொண்டது. ராஜபக்சவும் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவும் புதிய செயற்திட்டத்துடன் கரம் கோர்த்துக் கொண்டனர்.

இருபத்தைந்து ஆண்டுகளில் எட்டமுடியாதிருந்த வெற்றி, 33 மாதங்களில் சாத்தியமாகியுள்ளது. நெருங்கமுடியாது நெருப்பாக இருந்து வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் வீழ்த்தப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் சிதறடிக்கப்பட்டது. இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும் ரத்த வரலாறும் முடிவுக்கு வந்திருக்கின்றது. ஈழம் என்னும் கனவும் கூட!

இறுதி யுத்தம் நடைபெற்ற தருணங்களை நேரில் பார்த்து, பலரை பேட்டி கண்டு சார்பில்லாத தொனியில் இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கின்றார் நிதின் கோகலே. இந்தியாவின் முதன்மை செய்தித் தொலைக்காட்சியான என்.டி.டி.வி யின் இராணுவ- பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான ஆசிரியர் இவர். இலங்கையில் இராணுவத் திட்;டங்களை விளக்கமாக விபரிக்கும் இந்தப் புத்தகம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் நுணுக்கமாக ஆராய்கின்றது.

ஆசிரியரைப் பற்றி

போராட்டங்கள், புரட்சி, போர்கள் ஆகியவற்றை ஆழ்ந்து படிக்கும் நிதின் ஆனந்த் கோகலே, 26 ஆண்டுகளாக போராளிக்குழுக்கள் பற்றியும் இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு, நக்சல் காடுகள் ஆகிய கடினமான இடங்களில் இருந்து பதிவு செய்துள்ளார்.இதற்கு முன் இரு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் நடந்துள்ள இரு பெரும் போர்களான 1999 இந்தியா- பாகிஸ்தான் கார்கில் போர், இலங்கையில் 33 மாதங்கள் நடந்த நான்காம் ஈழப்போர் ஆகியவற்றை நேரில் பார்த்து தொலைக்காட்சிக்காக செய்திகளை அனுப்பிய ஒரே இந்தியப் பத்திரிகையாளர் இவராக மட்டுமே இருக்க முடியும்.

என்.டி.டி.வி. சானலின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விஷயங்கள் ஆசிரியராக பணியாற்றும் இவர், இந்தியாவின் அண்டை நாடுகளில் நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கின்றார்.

No comments:

Post a Comment