Thursday, July 15, 2010

தொகுதியில் ஒரு கண்! -இது ப.சி. ஸ்டைல்!


எப்போதும் டென்ஷனோடு இருக்கும் நாட்டின் முக்கியமான துறைக்கு அமைச்சராக இருந்தபோதிலும், தனது தொகுதிப்பக்கம் வாரம் ஒருநாளாவது வந்து மக்களை சந்திப்பதில் மற்ற எம்.பி.க்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

தனக்கு வாக்களித்த மக்களுக்கு குறைந்த பட்சம் எதாவது நன்மைகள் செய்துகொண் டிருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருக்கும் சிதம்பரம், கடந்த 3-ந்தேதி தேவகோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 25 "ரெப்கோ வங்கி' கிளைகளை நாடு முழுவதும் திறந்து வைத்து சாதனை படைத்தார்.

தேவகோட்டை எம்.வி.பி.எஸ். பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவில், இணைய தளம் மூலம் வங்கிக் கிளைகளை திறந்து வைத் தார். இதில் 3 மண்டல அலுவலகங்களும் அடங்கும். அங்கு பேசிய ப.சிதம்பரம், ""ரெப்கோ வங்கி மற்ற வங்கிகளைப் போல் இதுவரை செயல்படவில்லை. தாயகம் திரும்பியவர்களின் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்டது இவ்வங்கி. இந்த வங்கி ஒன்றுதான் உள்துறை அமைச்சகத் தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மற்றவையெல்லாம் நிதி அமைச்சக மூலமாகும்.

வங்கிகளில் பொதுமக்கள் கடன் வாங்கி, தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்க ளுடைய பொருளாதார நிலையும் உயரும். கந்து வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். கந்துவட்டிக்கு கடன் வாங்கி மாடு வாங்கினால், மாடு கட்டும் கயிறு கூட மிஞ்சாது. அதிகமான கடன்களை வழங்கினால்தான் வங்கிகளும் முன்னேற முடியும்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி ஆட்சியில், சுதந்திர இந்தியாவில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுள் ளது. இதை மாற்றுக் கட்சிகள் கூட மறுத்துப் பேச முடியாது. இது எங்கள் சாதனை. அதனால் பொதுமக்களே, தைரியமாக கடன் வாங்கி வீடுகளை கட்டுங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். அதற்கு ரெப்கோ வங்கிக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்றார் ப.சிதம்பரம்.

ரெப்கோ வங்கியின் எம்.டி. பாலசுப்ரமணியன், ""சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 14 ஒன்றியங்களில் நடப்பாண்டில் மட்டும் 109 கோடி ரூபாய் கடனாகக் கொடுக்கவுள்ளோம். இதன்மூலம் 85 ஆயிரம் பேர் பயனடைவார்கள். அடுத்ததாக இத்திட்டம் காஞ்சிபுரத்திலும், கடலூரிலும் 3 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்'' என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ்காரர் ஒருவர் ""அப்பச்சி ரொம்ப விவரமானவர். தனது தொகுதியை தக்க வச்சுக்க, 85 ஆயிரம் குடும்பங் களுக்கு எதாவது ஒரு வகையில லோன் சென்ற டைய ஏற்பாடு செஞ்சதோட மட்டுமில்லாம, தன் னோட ஆதரவாளர்களின் தொகுதிகளுக்கும் கடன் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்காரு. ஓட்டு போட்ட மக்களுக்கு இது போதாதா?'' என்றார் சிரித்தபடி.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் காளையார் கோயில் ஒன்றியத்துக்கு சென்றவர், மறவமங்கலம், பில்லூர் கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் உரை யாடினார். ""தொகுதிக்கு அமைச்சர் எதுவும் செய்யா விட்டாலும் பரவாயில்லை. இப்படி எங்கள பார்க்க வர்றதே சந்தோஷமா இருக்கு'' என்று கிராம மக்கள் சொல்லுமளவிற்கு ப.சி.யின் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இருந்தன. ஜனங்களின் சைக்காலஜியை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் ப.சி.

அதேபோல் அவருடைய நடவடிக்கைகளில் எந்த பந்தாவும் இருப்பதில்லை. நக்ஸல்களால் குறிவைக்கப் படும் ஒரு அமைச்சர், எவ்வித பாதுகாப்பு கெடுபிடி, ஆடம்பரமில்லாமல் மக்களோடு மக்களாக செயல்படுவது வியப்பான விஷயம்தான்.

4-ந்தேதி சிவகங்கை அருகிலுள்ள இலுப்பகுடி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

""உங்கள் ஊருக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கட்டிடம்தான் இந்த ஊருக்கு முதல் அரசுக் கட்டிடம் என்று சொன்னார்கள். நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் ஒரு பங்கை செலுத்தினால் அரசு 2 பங்கை செலுத்துகிறது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி யுள்ளது. இதை காங்கிரஸ், தி.மு.க. தொண் டர்கள் கிராம மக்களுக்குப் போய் சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கிராம மக்களே, நான் உங்களிடம் காசு, பணம் எதையும் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்'' என்று "டச்சிங்'காகப் பேசினார்.

அடுத்து சிவகங்கை நகராட்சியில் சலவைத் தொழி லாளர்களுக்கு தனது எம்.பி. நிதியிலிருந்து டோபிகானா கட்டி திறந்து வைத்தார். இத்தனை நிகழ்ச்சிகளுக்கு இடையில் சிவகங்கை நகர தி.மு.க. செயலாளர் ஆனந்தின் மகள் பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்று விட்டு வந்தார் ப.சி. எல்லாம் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்.

மானாமதுரை ஒன்றியத்தில் கல்குறிச்சி, கீழபசளை, அன்னவாசல், அரிமண்டபம், மிளகனூர், குவளைவேலி, கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், கால்பிரவு, ராஜகம்பீரம் ஆகிய ஊராட்சிகளுக்கு மூன்று மணி நேரத்தில் சென்று மக்களை சந்தித்து மனுக்களை வாங்கி வந்தார். மனு கொடுத்த மக்களிடம் ஜாக்கிரதையாக, ""நீங்கள் பல பிரச்சினைகளுக்காக மனு கொடுத்துள்ளீர் கள். அனைத்தையும் உடனே செய்துவிட முடியாது. அனைத்தையும் படித்துப் பார்த்து, முடிந்தவற்றை படிப்படியாகச் செய்வேன்'' என்று சாதுர்யமாகப் பேசினார்.

முள்ளிக்குண்டு கிராமத்தில் தனது கட்சியின் தேவகோட்டை நகர சபை கவுன் சிலர் அன்பு என்பவருக்கு சொந்தமான பாலிடெக்னிக்கை திறந்து வைத்துப் பேசும் போது, ""தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு மாநிலத்தி லும் ஒரு மத்திய பல்கலைக்கழக மும் கொண்டு வருவதுதான் அடுத்த பணி'' என்றார்.

""2 நாள் டூரில் எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை கிராமங் கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் வேற எங்கேயும் இப்படியொரு எம்.பி.ய பார்க்க முடியாது. சிலபேருக்கு எம்.பி. என்ற பதவியின் அர்த்தம் புரியாமல்தான் அலட்சியமாக இருக்கிறார் கள். அதுபோல் எங்கள் தலைவர் போல, "பங்சுவாலிட்டி'யை யாரிடமும் காண முடி யாது. பலபேர் பலவிதமா அவரை விமர் சனம் செய்தாலும், தொகுதி மக்கள் அனை வரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இன்னைக்கு சிவகங்கை மாவட்டத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்'' என்றார் காங்கிரஸ் பிரமுகர் துரை.கருணாநிதி.

ப.சிதம்பரத்தின் பாணியை தமிழகத்தின் மற்ற எம்.பி.க்களும் பின்பற்றலாமே! அப்போதுதான் தொகுதி மக்களுக்கு தாங்கள் ஓட்டுப் போட்டது பிரயோஜன மானதுதான் என்ற எண்ணம் வரும்.

No comments:

Post a Comment