Thursday, April 29, 2010

ஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி தரத் தயார் – மோடியின் தந்தை


shockan.blogspot.com
லலித் மோடி விரும்பினால், ஐபிஎல் லைப் போன்ற புதிய அமைப்பைத் தொடங்க அவருக்கு ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்று லலித் மோடியின் தந்தை கே.கே. மோடி கூறியுள்ளார்.

மோடியின் தந்தை கே.கே.மோடி, தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் மோடி விரும்பினால் புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கட்டும். அதற்காக ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மால்பரோ, போர் ஸ்கொயர், ரெட்அன்ட் ஒயிட் ஆகிய சிகரெட் வகைகளை தயாரித்து விற்கும் காட்பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் கே.கே. மோடி. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடியாகும்.

தற்போது தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கே.கே. மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் லலித் மோடி. இதனால் கூடஅவர் நீக்கப்பட்டிருக்கலாம்.

அவரை சிலர் குறி வைத்து நீக்கியுள்ளனர். ஆனால் லலித் மோடி மனம் தளரக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

லலித் மோடிக்கு எங்களது குடும்பத்தினர் அனைவரும் முழு ஆதரவாக உள்ளோம். லலித் மோடி விரும்பினால் ஐபிஎல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க ரூ. 400 கோடியைத் தர நான் தயார்.

நீங்கள் வெற்றிகரமாக இயங்கினால் அதை சிலர் விரும்பாமல் போகலாம். உங்களைக் குறிவைக்கலாம். அதுதான் லலித் மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி ஒரு இடத்தில் அதிகஅளவில் பணம் புழங்கினால் அங்கு அரசியலும் நுழைந்து விடுகிறது.

லலித் மோடியின் வாழ்க்கை முறையை நான் குறை சொல்ல மாட்டேன். அது மோடி குடும்பத்தினர் அனைவரிடமும் உள்ளதுதான். மோடியின் தம்பியும் அவரைப் போலத்தான்.

மோடி செய்த ஒரே தவறு ஒரு கம்பெனியின் சிஇஓ போல நடந்து கொண்டது மட்டுமே. மற்றபடி அவரிடம் எந்த்த் தவறும் இல்லை. அவரை நம்பித்தான் அணி உரிமையாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோடி மீதான நம்பிக்கைதான் இந்த அமைப்பு இவ்வளவு தூரம்வளரக் காரணம் என்றார் மோடி.

இதற்கிடையே, தனது தந்தையின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை விரைவில் லலித் மோடி ஏற்கவுள்ளாராம்.

No comments:

Post a Comment