Wednesday, October 28, 2009

பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்!


ஆங்கில நாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார்.என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் சாத்வீகப் பண்புக் கூறுகளை அடிநாதமாகக் கொண்ட ஈழத்தமிழ் சமூகம் ஆயுதமேந்தும்படி உந்தித் தள்ளப்பட்ட வரலாற்றுப் பின்புலம், அன் றும் சரி இன்றும் சரி பிரச்சனையின் வேர் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாதம்தான் என்ற உண்மை, இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறெல்லாம் ஈழ மக்களின் போராட்டத்தைப் பந்தாடி இறுதியில் இன அழித்தலுக்கும், துணை நின்ற கொடுமை, விடுதலைப் போராட்டம் படைத்த சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சாதனைகள் எனப் பலவற்றை எடுத்துச் சொன்னேன்.விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த தவறுகளாக அவர் கருதியவற்றை பட்டியலிட்டார். "இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?' என்றார். "பல குற்றச்சாட்டுகள் தவறான புரிந்துமையால் வருவது. அதேவேளை நீங்கள் குறிப்பிட்ட சில குறைபாடுகள் உண்மை, ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்' என்றேன். உடனே என்னை அவர் கேட்டார், "அப்படியென் றால் சிந்திக்கும் பக்குவம் கொண்ட நீங்கள் கூட விடுதலைப்புலிகள் விட்ட பிழைகளை வெளிப்படை யாக சுட்டிக் காட்டத் தயங்குகிறீர்களே ஏன்?' என்றார்.அவருக்கு நான் சொன்னேன், ""உலகில் எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி தமது ஒப்பிலா தியாகத்தையும், தமது மக்களையும் மட்டுமே நம்பி, நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சிறியதோர் நிலப்பரப்பில் மகத்தானதோர் விடு தலைப் போராட்டத்தைக் கட்டி யெழுப்பியவர்கள் அவர்கள். தொடக் கத்தில் நமது (இந்திய) சுயநல பூகோள ராணுவ-அரசியல் தேவைகளுக்காக நாம் அவர்களை ஆதரித்தோம். நாம் சொல்கிறபடி யெல்லாம் கேட்கிற வீட்டு நாய் போல அடங்கி வாலாட்டி நிற்க மறுத்தபோது மனசாட்சியின்றி அவர்களை வேட்டையாடினோம், இன அழித்தலுக்கும் துணை நின்றோம். நீங்கள் ஒரு உயர்ஜாதிக்காரர். புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதற்காக மட்டுமே நீங்கள் ராஜபக்சே கொடுங்கோலர்களை ஆதரித்த தாக நான் கருதவில்லை. உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் தமிழன் ஜெயித்து விடக் கூடாதென்ற குரூர வைராக்கியம் இருந்ததாக நான் நம்பினேன், நம்புகிறேன். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றால் அது தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இத்தொலைபேசி அழைப்பு உருவாக்கிய உள்ளக் கதறல்தான் அடுத்தநாள் இணைய தள நேர்காணல் ஒன்றில் குமுறலாக வெளிப்பட்டது.கடந்த சில நாட்களில் கிடைத்துள்ள மிகவும் நம்பகமான தகவல்களின்படி சமீப நாட்களில் நமது ராமேசுவரம் மீனவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற் படையினரோடு சீன கடற்படையினரும் இணைந்து இயங்குகிறார்கள். கச்சத்தீவு பகுதியிலேயே தனது பலத்தை நிறுவ சீனா ஏதோ திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வருகின்றன.இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கப் போகிற சீனாவுக்கு நமது முற்றமான இந்தியப் பெருங்கடலையே இந்திய அதிகார வர்க்கம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இந்த தேசத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் செய்கிற இந்த பாதுகாப்பு -வெளியுறவுக் கொள்கையை உந்தித் தள்ளியது அதிகார வர்க்கத்தின் தமிழின வெறுப்பு. அத்துரோகத்திற்கு அறிவு, ஊடகப் பின்புலம் உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பற்றிய அறிவு விசாரணை கூட நம்மிடையே சொல்லும்படி இல்லை. ஆனால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்ப்பு பிரமாதமாய் களை கட்டுகிறது.கூர்மைப்படப் போகும் சீன-இந்தியச் சிக்கல்தான் தமிழ் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையும் முன் நகர்த்தும்.
எங்ஙனம்?

No comments:

Post a Comment