Tuesday, January 19, 2010

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படம் சில ஆங்கிலப் படங்களின் தழுவலாக இருப்பதை யாராவது நிரூபித்தால், நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன் என்றார் இயக்குநர் செல்வராகவன்.
பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரத்தில் ஒருவன் படம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியாததால், வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கூறுகிறது.
அதே நேரம் மீடியாவில், வேறு விதமான விமர்சனங்களை செல்வராகவன் எதிர்கொள்ள வேண்டிய சூழல்.
எனவே உடனடியாக பிரஸ் மீட்டுக்கு அழைக்கப்பட்டனர் செய்தியாளர்கள்.இந்த கூட்டத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?' என்று கேள்வி எழுப்பினர்.இதைக் கேட்டதும் மிகவும் கடுப்பான செல்வராகவன், 'இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்..." என்றார். அடுத்ததாக, 'படத்தில் லாஜிக்கே இல்லையே?' என்று கேட்டதற்கு, "ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள் (!??). அவதார் படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்.இப்படி இருந்தால் வித்தியாசமான படங்கள் எப்படி வரும்? ஹாலிவுட்டை விட அட்டகாசமான படைப்புகளை இங்கேயே தர முடியும்" என்றார்.

No comments:

Post a Comment