Saturday, December 26, 2009

முகாமில் 12,000 விடுதலைப் புலிகள்-இலங்கை ராணுவம்

வன்னி முகாமில் பதுங்கியிருந்த 12 ஆயிரம் விடுதலைப்புலிகளை கண்டு பிடித்துள்ளோம் என்று இலங்கை ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இலங்கை ராணுவ அதிகாரி பிரிகேடியர் தம்மிகா வீர சேகரா கொழும்புவில் நிருபர்களிடம் கூறியதாவது: வவுனியா அருகே உள்ள வன்னி முகாமில் விடுதலைப்புலிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து எதிர் அணியினர் தெரிவித்த அங்க அடையாளங்கள் மூலமாகவும், உளவியல் ரீதியாக ஆராய்ந்தும் 12 ஆயிரம் விடுதலைப்புலிகளை கண்டு பிடித்துள்ளோம். அவர்களில் 6,894 பேர் ஆண்கள், 2,098 பேர் பெண்கள்.
இவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக பாதைக்கு திரும்பும் வகையில் ஆலோசனைகள் (கவுன்சிலிங்) வழங்கிவருகிறோம். இது அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
போரின் போது உடல் உறுப்புகளை இழந்த, ஊனமுற்ற விடுதலைப்புலிகளின் மறுவாழ்வு குறித்து ராணுவம் சிறப்பு கவனம் மேற்கொண்டுள்ளது. உடல் ஊனமுற்ற 1420 பேருக்கு மறுவாழ்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.உடல் ஊனமுற்றவர்களில் 413 பேர் ஒருகால் இழந்தவர்கள்.
71 பேர் ஒரு கை இழந்தவர்கள்.
13 பேர் காது கேளாதவர்கள்.
41 பேர் பாதி நிலையில் காது கேளாதவர்களாகவும், 11 பேர் கண்பார்வை பரிபோன வர்களாகவும் உள்ளனர். இவர்கள் தவிர 156 பேர் பாதி கண் பார்வையற்றவர்களாக உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment